ஜெயலலிதா வீடு முன் தீக்குளிக்க முயற்சி... மணப்பாறையைச் சேர்ந்த அதிமுக தொண்டர் கைது
சென்னை: சென்னை போயஸ் கார்டனில் உள்ள முதல்வர் ஜெயலலிதாவின் வீடு முன்பு, அதிமுக தொண்டர் ஒருவர் தீக்குளிக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வீடு சென்னையில் போயஸ் கார்டனில் அமைந்துள்ளது. இன்று மதியம் முதல்வரின் வீடு அருகே சந்தேகப்படும் வகையில் சுற்றித் திரிந்த நபர் ஒருவர் திடீரென மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், விரைந்து செயல்பட்டு அவரது தற்கொலையை முயற்சியைத் தடுத்தனர். பின்னர் அந்நபர் கைது செய்யப்பட்டார்.
போலீசாரின் விசாரணையில் கைதுக்கு முயன்ற நபர், திருச்சி மணப்பாறையைச் சேர்ந்த அதிமுக தொண்டர் மோகன் எனத் தெரியவந்தது.
மணப்பாறை கூட்டுறவுத்தலைவர் வெங்கடாச்சலம் பண மோசடி செய்ததால் மனமுடைந்த மோகன் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட மோகனிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.