சரக்கு வாங்க காத்திருக்க சொன்னதால் 4 பேரின் கன்னத்தைக் கடித்த வாலிபர்!
மதுரை மாவட்ட கோர்ட்டு அருகே மாட்டுத்தாவணிக்கு செல்லும் வழியில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது.
இன்று காலை கடை திறப்பதற்கு முன்பே பயனாளிகள் சரக்கு வாங்க காத்திருந்தனர்.
நச்சரித்த குடிமகன்கள்:
காலை 10 மணி அளவில் கடை திறந்தபோது காத்துக் கொண்டிருந்த அவர்கள் சரக்கு வாங்கும் ஆர்வத்துடன் சென்று டாஸ்மாக் கடை விற்பனையாளர் செல்லத் துரையை நச்சரித்தனர். அவரும் பொறுமையுடன் சரக்குகளை கொடுத்தார்.
ஒரே கல்ப்தான்:
இதில் ஒரு வாலிபர் சரக்கு வாங்கி அதே இடத்திலேயே அடித்தார். சிறிது நேரத்தில் அவருக்கு போதை தலைக்கேறியது.
மீண்டும் சரக்கு:
ஆனாலும் அந்த வாலிபர் மீண்டும் சரக்கு வாங்குவதற்காக டாஸ்மாக் விற்பனையாளர் செல்லத்துரையை அணுகினார். அப்போது அவர் சிறிது நேரம் காத்திருங்கள் என்று கூறினார்.
படாரென்று கடித்த வாலிபர்:
ஆனால் தனக்கு உடனடியாக சரக்கு வேண்டும் என்று செல்லத்துரையை அந்த வாலிபர் தொந்தரவு செய்தார். சரக்கு கொடுக்க சிறிது தாமதம் ஆனதால் பொறுமை இழந்த அவர் போதையில் திடீரென்று செல்லத்துரையின் கை, கன்னத்தில் கடித்தார்.
4 பேரும் பாதிப்பு:
மேலும் ஆத்திரம் அடைந்த அவர் அருகில் நின்றிருந்த 4 பேரையும் கன்னத்தில் கடித்தார். இதில் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது.
தர்ம அடி வாங்கிய வாலிபர்:
போதையில் ரகளை செய்த அந்த வாலிபரை அங்கிருந்தவர்கள் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். மேலும் அங்கே இருந்த கம்பத்தில் கட்டி போட்டனர்.
போலீசார் கைது:
இதுகுறித்து தகவல் அறிந்த அண்ணாநகர் போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து அந்த வாலிபரை மீட்டனர். வாலிபரிடம் விசாரணை நடத்தியதில் ரகளை செய்த வாலிபர் மானகிரியை சேர்ந்தவர் என தெரியவந்தது.
வாலிபரை மீட்ட மனைவி:
இதற்கிடையில் சம்பவம் குறித்து அறிந்து கொண்ட வாலிபரின் மனைவியும் சம்பவ இடம் வந்து தனது கணவரை விடுவிக்குமாறு கண்ணீர் மல்க கூறினார். இதையடுத்து போலீசார் அந்த வாலிபரை எச்சரித்து அனுப்பினர்.