மகளின் சான்றிதழ்களை மீட்க முயற்சித்து வெள்ளத்தில் மூழ்கி பலியான தந்தை
சென்னை: சென்னையில் வெள்ளத்தில் மிதந்த வீட்டில் இருந்து தனது மகளின் சான்றிதழ்களை எடுக்கச் சென்ற நபர் நீரில் மூழ்கி பலியானார்.
சென்னை கிரீம்ஸ் சாலை அருகே உள்ள திடீர் நகரைச் சேர்ந்தவர் எம். ரவீந்திரன்(39). தனியார் கூரியர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில் அவரது வீடும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் குடும்பத்துடன் மீட்கப்பட்டு வேறு இடத்தில் தங்க வைக்கப்பட்டார்.
Man drowns while trying to save daughter’s certificates #ChennaiFloods
https://t.co/O4I75kQTMB pic.twitter.com/t0XSfvrpFn
— The Hindu (@TheHindu) December 6, 2015
வியாழக்கிழமை மாலை அவர் தனது மகளின் பள்ளி சான்றிதழ்கள் மற்றும் ரேஷன் அட்டயை தேடி எடுத்து வர வீட்டிற்கு சென்றார். அப்போது அவர் வெள்ள நீரில் மூழ்கி பலியானார். மறுநாள் காலை அவரது உடல் மிதந்து வந்ததை அவரது உறவினர்கள் பார்த்து கதறி அழுதனர்.
இந்நிலையில் சனிக்கிழமை திடீர் நகர் பகுதியைச் சேர்ந்த பலர் தங்கள் வீடுகளுக்கு சென்று வங்கி பாஸ்புக், ஆவணங்கள், சான்றிதழ்கள், படுக்கை, உடை ஆகியவற்றை எடுத்து வந்து காய வைக்க முயன்றனர்.
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஜெயந்தி என்பவர் கூறுகையில்,
இதுவரை அரசு எங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. கல்லூரி மாணவர்கள் வந்து தான் எங்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கி வருகிறார்கள். வெள்ளம் எங்கள் வீடுகளுக்குள் புகுந்து அனைத்தையும் அடித்துச் சென்றுவிட்டது. எங்களை படகில் மீ்ட்கையில் வீட்டிற்குள் மார்பளவு நீர் இருந்தது என்றார்.