கூடங்குளத்தில் சிக்கியவர் நக்சல் இயக்கத்தை சேர்ந்தவரா?- கோட்டை விட்ட அதிகாரிகள் திகில்
நெல்லை: கூடங்குளம் அணு உலை அருகே பிடிப்பட்ட ஜார்க்கண்ட் இளைஞர் நக்சல் இயக்கத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்த நிலையில் சரியான விசாரணை நடத்தாமல் கோட்டை வி்ட்ட அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.
நெல்லை மாவட்டம் கூடன்குளத்தில் இந்தியா-ரஷ்யா கூட்டு முயற்சியில் 1992 ஆம் ஆண்டு இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டு அதில் ஓன்று பராமரிப்பு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுளளது. இரண்டாவது அணு உலை மின்சாரம் தயாரிப்பு பணிக்காக தயாராகி வருகிறது.
கூடன்குளம் அணு உலையை சுற்றிலும் மத்திய தொழில் பாதுகாப்பு படை, மத்திய உளவு பிரிவு மற்றும் கடலோர காவல் பிரிவு, கமண்டோ படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அணு மின் நிலையத்தில் பணி புரிபவர்கள் பெரும்பாலானோர் வட மாநலத்தை சேர்ந்தவர்கள். பீகார், ஜார்கணட் மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் அதிகமாக உள்ளனர்.
சமீபத்தில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஓருவர் இங்கு பணியில் சேர்ந்தார். ஜார்கண்ட் பீகார் மாநிலத்தில் நக்சல் ஆதிக்கம் அதிகம் உள்ளதால் அணு மின் நிலைய வேலைக்கு வரும் இந்த மாநில இளைஞர்களிடம் உளவுப் பிரிவு, கியூ பிரிவு போலீசார் விசாரித்த பின்னரே பணியில் சேர்க்கப்படுவர். ஜார்கண்ட் இளைஞரிடம் சரியான அடையாள அட்டை, சரியான முகவரி இல்லாததால் அவரை திருப்பி அனுப்பி விட்டனர். ஆனால் அவர் சொந்த மாநிலத்திற்கு செல்லாமல் கூடங்குளத்தையே சுற்றி வந்துள்ளார்.
இதையடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் அந்த வாலிபரை பிடித்து கூடன்குளம் போலீசில் ஒப்படைத்தனர். ஆனால் போலீசார் அவரிடம் சரியான விசாரணை நடத்தாமல் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று கூறி காவல்கிணறு பகுதியில் விட்டு விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அந்த இளைஞர் நக்சல் இயக்கத்தை சேர்நதவராக இருக்கலாம் என்று உளவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். இதனால் அவரை போலீசார் பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடி வருகின்றனர். கோட்டை விட்ட அதிகாரிகள் இதனால் கலக்கத்தில் உள்ளனர்.