மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 10 ஆண்டு சிறை
சென்னை:மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கிண்டி, நரசிம்மபுரத்தை சேர்ந்தவர் உத்தண்டி. இவருக்கும் அம்பிகா என்பவருக்கும், கடந்த 2003ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், உத்தண்டி அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். இதணை கண்டித்த மனைவி அம்பிகாவிடம் தகராறு செய்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்த அம்பிகா, கடந்த 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து மனைவியை தற்கொலைக்கு தூண்டியதாக உத்தண்டி மீது கிண்டி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னையில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மீனா சதீஷ், "வழக்கில் உத்தண்டி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கிறேன் " என்று தீர்ப்பளித்துள்ளார்.