கடையம் அருகே கல்லால் அடித்து மனநலம் பாதிக்கப்பட்ட தொழிலாளி படுகொலை
நெல்லை: கடையம் அருகே கல்லால் தாக்கி கூலித்தொழிலாளி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மாவட்டம் கடையத்தை அடுத்த பொட்டல்புதூர் வடக்கு புதுமனைதெருவில் உள்ள சாக்கடையில் இன்று அதிகாலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.
கல்லால் தாக்கி முகம் சிதைக்கபட்ட நிலையில் பிணத்தை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் சிவமுருகன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்டவர் யார்? என போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் கொலையான வாலிபர் அதே பகுதியை சேர்ந்த சலீம் (வயது40) கூலித்தொழிலாளி என்பது தெரிய வந்தது. இவருக்கு திருமணமாகி அலிபாத் என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
சலீம் எதற்காக கொலை செய்யப்பட்டார்? அவரை கொலை செய்தவர்கள் யார்? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொலை செய்யப்பட்ட சலீம் கடந்த சில மாதங்களாக மனநிலை பாதிக்கப்பட்டவர் போல அப்பகுதியில் சுற்றி திரிந்து வந்துள்ளார். செவ்வாய்கிழமையன்று நள்ளிரவில் மர்மநபர்கள் சலீமை கல்லால் தாக்கி கொலை செய்து சாக்கடையில் வீசி சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
கொலை சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த வாலிபரும் மனநிலை பாதிக்கபட்டவர் என்பதால் சலீமுக்கும், பிடிபட்ட வாலிபருக்கும் ஏற்பட்ட தகராறில் சலீம் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு யாராவது சலீமை கொலை செய்தார்களா? என பல கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவம் கடையம், பொட்டல்புதூர் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.