திருமங்கலம்: மாணவிகள் மீது ஆசிட் வீசியது மனநலம் பாதிக்கப்பட்டவரா? போலீஸ் விசாரணை!
மதுரை: திருமங்கலத்திலுள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவிகள் மீது ஆசிட் வீசிய வழக்கில் ஒருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமங்கலத்திலுள்ள மதுரை காமராஜர் பல்கலைக்கழக மாணவிகள் மீனா (17) மற்றும் அங்காளஈஸ்வரி (18) ஆகியோர் மீது கடந்த 12ஆம் தேதி மர்ம நபர் ஒருவர் ஆசிட்டை வீசி விட்டு தப்பியோடி விட்டார். இதில், மீனாவுக்கு முகத்தின் வலதுபுறம், தோள்பட்டை, வயிறு உள்ளிட்ட இடங்களிலும், அங்காள ஈஸ்வரிக்கு தோள்பட்டை, கைகளிலும் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் இருவரும் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து, இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி அந்தக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து விட்டு, போராட்டம் நடத்தினர். இதைத் தொடர்ந்து கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மனநலம் பாதிக்கப்பட்ட எனது மகன் தான் மாணவிகள் மீது ஆசிட்டை வீசினான் எனக் கூறி ஒருவர், எஸ்.பி. அலுவலகத்தில் தனது மகனை ஒப்படைத்தார். இதையடுத்து, அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.