தம்பி மனைவியை தனக்கும் "மனைவி"யாக்கிய கூலித் தொழிலாளி.. விஷம் குடித்தார்
கோவை: கோவையில் கள்ளத் தொடர்பு அம்பலமானதால் தம்பியின் மனைவியுடன் தொழிலாளி ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்ய முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
கோவையை அடுத்த போத்தனூர் இடையர் பாளையத்தை சேர்ந்தவர் கருப்பசாமி. மில்லில் ஊழியராக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி பாரதிமணி. இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுக்கு முன்பு திருமணமானது. ஒரு குழந்தை உள்ளது. இவர்கள் வீட்டின் அருகே கருப்பசாமியின் அண்ணன் பாலசுப்பிரமணியம் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் பாலசுப்பிரமணியமும், பாரதிமணியும் நெருங்கி பழகினார்கள். இவர்களது கள்ளத்தொடர்பு விவகாரம் கருப்பசாமிக்கு தெரியவரவே மனைவியை கண்டித்தார். அதை அவர் காதில் வாங்கிக் கொண்டதாக தெரியவில்லை.
இதற்கிடையே திடீரென்று பாலசுப்பிரமணியமும், பாரதிமணியும் மாயமானர்கள். இது குறித்து கருப்பசாமி போத்தனூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் விசாரித்து வந்தனர்.
போலீசார் தங்களை தேடுவதை அறிந்ததும் கள்ளக்காதல் ஜோடி ஊர் திரும்பியது. இருவருக்குமிடையே பஞ்சாயத்து பேசப்பட்டது. அப்போது கருப்பசாமி இனிமேல் பாரதிமணி எனக்கு தேவையில்லை, பாலசுப்பிரமணியத்துடன் வாழட்டும் என்று கூறி விட்டார்.
பாரதிமணியும் பாலசுப்பிரமணியத்தின் வீட்டுக்கு சென்று விட்டார். இன்று காலை வீட்டின் முன்பு பாலசுப்பிரமணியமும், பாரதிமணியும் விஷம் குடித்த நிலையில் வாயில் நுரை தள்ளி மயங்கி கிடந்தனர். அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் அவர்கள் இருவரையும் கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. போத்தனூர் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.