சென்னையில் பாலத்தின் எதிர்திசையில் சென்ற நபர் கார் மோதி பலி -விதி மீறியதால் மாறிய தலைவிதி...
குரோம்பேட்டையில் எம்ஐடி பாலத்தில் நிகழ்ந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் கார் மோதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
சென்னை: வீட்டிற்கு செல்ல வேண்டுமே என்ற அவசரத்தில் விதியை மீறி பாலத்தின் எதிர்திசையில் சென்ற நபர் கார் மோதி உயிரிழந்துள்ளார். விதி மீறியதால் அவரது தலைவிதியே மாறிவிட்டது.
விபத்தில் சிக்கி பலியான நபரின் பெயர் இக்பால், 47. இவர் சென்னை குரோம்பேட்டையை அடுத்த அஸ்தினாபுரத்தில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவர் ஏழுகிணறு பகுதியைச் சேர்ந்தவர்.
தினமும் வீட்டில் இருந்து மின்சார ரயில் மூலமாக குரோம்பேட்டை ரெயில் நிலையம் வந்து, அங்கிருந்து மோட்டார்சைக்கிளில் கடைக்கு செல்வார். பின்னர் இரவில் மோட்டார்சைக்கிளை குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் வாகனம் நிறுத்தும் இடத்தில் விட்டு விட்டு மீண்டும் மின்சார ரயிலில் வீட்டிற்கு செல்வது வழக்கம்.
ஞாயிறன்று இரவு வழக்கம் போல் வியாபாரத்தை முடித்து விட்டு, கடையை பூட்டி விட்டு சுமார் 11 மணியளவில் மோட்டார்சைக்கிளில் குரோம்பேட்டை ரயில் நிலையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
குரோம்பேட்டை எம்.ஐ.டி. மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, வாகனங்கள் இன்றி பாலம் காலியாக இருந்ததால், ரயில் நிலையத்திற்கு விரைவாக செல்லவேண்டும் என்பதற்காக பாலத்தின் எதிர் திசையில் அவர் சென்று உள்ளார்.
அப்போது எதிரில் பாலத்தில் வேகமாக வந்த அந்த கார் கண்இமைக்கும் நேரத்தில் எதிர்திசையில் வந்துகொண்டிருந்த இக்பாலின் மோட்டார்சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் எம்.ஐ.டி. மேம்பாலத்தில், 30 அடி உயரத்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட இக்பால் ஜி.எஸ்.டி. சாலையில் விழுந்தார். தலையில் பலத்த காயமடைந்த அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே இக்பால் பரிதாபமாக உயிர் இழந்தார்.
இந்த விபத்து தொடர்பாக குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் காரை ஓட்டி வந்த டாக்டர் பிரேம்சந்தை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், அவர் குடிபோதையில் காரை ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது.
வீட்டிற்கு விரைவாக செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் போக்குவரத்து வீதியை மீறி பாலத்தின் எதிர் திசையில் சென்றதால்தான் இக்பால் உயிரை பறி கொடுத்துள்ளார். அதே போல் டாக்டர் பிரேம்சந்த் குடிபோதையில் காரை ஓட்டிவந்ததும் விபத்துக்கு ஒரு காரணம் என்று போக்குவரத்து போலீசார் கூறியுள்ளனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னையில் போதை ஆசாமிகளால் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன.
லாரி விபத்து 2 பேர் பலி
இதனிடையே கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலையில் நிலக்கரி லாரி மீதி மற்றொரு லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் குண்டூரைச் சேர்ந்த ஓட்டுநர் பஷீர் மற்றும் கிளீனர் ரியாஸ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆந்திராவில் இருந்து வந்த டேங்கர் லாரி கட்டுப்பாட்டை இழந்து முன்னாள் சென்ற நிலக்கரி லாரி மீது மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.