கள்ளக்காதலியை கொன்று தானும் விஷம் குடித்த காதலன் – மருத்துவமனையில் உயிரிழப்பு
திட்டக்குடி: கள்ளக்குறிச்சி அருகே கள்ளக்காதலியை கொலை செய்துவிட்டு தானும் விஷம் குடித்த காதலன் இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி அருகே மேல்பவழங்கூரை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி பிரேமா . இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பிரேமாவும், குமாரும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தனர்.
அப்போது பிரேமாவும், சென்னை தாம்பரத்தை சேர்ந்த தேவகுமார் என்பவரும் பழகி வந்தனர். இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
இந்த நிலையில் கணவனுடன் ஏற்பட்ட தகராறில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரேமா கணவனை விட்டு பிரிந்து தனது மகன்களுடன் சொந்த ஊரான வேப்பூர் அருகே நல்லூரில் தங்கி இருந்தார். அப்போது தேவகுமார் அடிக்கடி நல்லூருக்கு வந்து பிரேமாவை சந்தித்துவிட்டு செல்வார்.
இதற்கிடையே பிரேமாவுக்கு கணவனுடன் சேர்ந்து வாழ ஆசை ஏற்பட்டது. இதனையறிந்த தேவகுமாருக்கு ஆத்திரம் ஏற்பட்டது. பிரேமாவை கொன்றுவிட தேவகுமார் முடிவு செய்தார். கடந்த 25 ஆம் தேதி தேவகுமார் குடிபோதையில் நல்லூருக்கு வந்தார்.
அங்கு பிரேமாவிடம் என்னை விட்டு பிரிந்து செல்ல நினைக்கும் உன்னை சும்மா விடமாட்டேன் என்று கூறி கத்தியால் பிரேமாவின் கழுத்தை அறுத்தார். இதில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பிரேமா இறந்து போனார்.
இதனை பார்த்ததும் பயந்துபோன தேவகுமார் தற்கொலை செய்ய முடிவு செய்தார். தயாராக வைத்திருந்த விஷத்தை அவர் குடித்துவிட்டார். இதில் மயங்கி விழுந்து கிடந்த அவரை வேப்பூர் போலீசார் மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் தேவகுமார் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இன்று காலை தேவகுமார் இறந்து போனார்.இதுகுறித்து வேப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.