குடும்பத் தகராறு... மகளைத் தேடி வந்த மருமகனை தடியால் அடித்துக் கொன்ற மாமனார் கைது
கிருஷ்ணகிரி: குடும்பத் தகராறு காரணமாக கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு வந்த மகளை அழைத்துச் செல்ல வந்த மருமகனை தடியால் அடித்துக் கொன்ற மாமனாரை கிருஷ்ணகிரி போலீசார் கைது செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போகனப்பள்ளியைச் சேர்ந்த பொன்னுசாமி மகனான முரளி (30), அதே ஊரில் உள்ள சிப்பவர் இரவி என்பவரின் மகளான துர்காவை கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து மணந்து கொண்டார். இந்தத் தம்பதிக்கு இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், தம்பதிகளிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கோபித்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார் துர்கா.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை துர்காவை அழைத்து வர தனது மாமனார் ரவி வீட்டுக்குச் சென்றுள்ளார் முரளி. அங்கே தன்னுடைய மனைவி துர்காவை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு முரளி தனது மாமனாரிடம் கேட்டுள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த் தகராறு முற்றியதில் முரளியை ரவி தடியால் அடித்துள்ளார். ரவியில் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தார், அவரை மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த முரளி, சிகிச்சைப் பலனின்றி கடந்த செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
முரளியின் மரணம் குறித்து அவரது தாய் செக்கம்மா (வயது-60) என்பவர் கொடுத்த அளித்த புகாரின் பேரில், கிருஷ்ணகிரி நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மருமகன் முரளியை கொன்றதாக மாமனார் இரவியை கைது செய்துள்ளனர்.