கள்ளக்காதலை விடாததால் வாலிபரை வெட்டிக் கொன்றோம் - கைதான மூவர் வாக்குமூலம்
கயத்தாறு: கயத்தாற்றில் ஒருவர் கொலையான வழக்கில் கள்ளத்தொடர்பை கைவிட மறுத்ததால் வெட்டிக் கொலை செய்தோம் என்று கைதான 3 பேர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள மானங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவருடைய மகன் ஐசக். இவர் பட்டப் படிப்பு படித்து விட்டு விவசாயம் செய்து வந்தார். இவருடைய மனைவி பாப்பா. இவர்களுக்கு ஆல்வின், சாம், ஜேம்ஸ் ஆகிய 3 மகன்களும், ஷீபா என்ற மகளும் உள்ளனர்.
கடந்த 22ஆம் தேதி மாலையில் ஐசக் தனது தோட்டத்தில் பயிரிடப்பட்ட நாற்று சோளத்துக்கு தண்ணீர் பாய்ச்சச் சென்றார். அப்போது அங்குவந்த மர்மநபர்கள் ஐசக்கை வெட்டிக் கொலை செய்து, அவரது கிணற்றில் உடலை வீசிச் சென்றனர். ஐசக்கின் மொபட்டையும் கிணற்றுக்குள் தள்ளினர். இதுகுறித்து கங்கைகொண்டான் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரதாபன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
கொலை நடந்த இடத்தில் மோப்பம் பிடித்த போலீஸ் நாய், அப்பகுதியில் உள்ள டேனியல் என்பவரது வீட்டு வாசலில் சென்று படுத்து கொண்டது. இதுதொடர்பாக டேனியல், அவருடைய அண்ணன் எட்வர்டு ராஜா, உறவினரான ரவிசங்கர் ஆகிய 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் 3 பேரும் சேர்ந்து ஐசக்கை கொலை செய்து, பிணத்தை கிணற்றில் வீசியது தெரிய வந்தது.
கைதான எட்வர்டு ராஜா என்பவர், "என்னுடைய மனைவி புஷ்பத்துக்கும், ஐசக்குக்கும் இடையே நீண்ட நாட்களாக கள்ளத் தொடர்பு இருந்தது. நான் இல்லாத நேரங்களில் ஐசக் எனது வீட்டுக்கு சென்று, என்னுடைய மனைவியிடம் உல்லாசமாக இருந்து வந்தார். எனவே கள்ளத்தொடர்பை கைவிடுமாறு ஐசக்கிடம் பலமுறை கூறியும் அவர் மறுத்து விட்டார். இதுகுறித்து என்னுடைய தம்பி மற்றும் உறவினர்களிடம் தெரிவித்தேன். அவர்களும் ஐசக்கிடம் சென்று பேசினர். ஆனாலும் ஐசக் கள்ளத்தொடர்பை கைவிடுவதாக இல்லை.
சம்பவத்தன்று மாலையில் நான், என்னுடைய தம்பி டேனியல், உறவினர் ரவிசங்கர் ஆகிய 3 பேரும் ஐசக்கின் தோட்டத்துக்கு சென்றோம். அப்போது, ஐசக்கிடம் கள்ளத்தொடர்பை கைவிடுமாறு கூறினோம். ஆனால் அவர், கள்ளத்தொடர்பை கைவிட முடியாது, உங்களால் முடிந்ததை செய்யுங்கள் என்று கூறினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள் ஐசக்கை சரமாரியாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்தோம். பின்னர் அவரது உடலை இழுத்து சென்று தோட்டத்தில் உள்ள கிணற்றில் வீசினோம். அவரது மொபட்டையும் கிணற்றுக்குள் தள்ளினோம். கொலை நடந்த இடத்தில் மோப்பம் பிடித்த போலீஸ் நாய் என்னுடைய தம்பியின் வீட்டு வாசலில் சென்று படுத்ததால் போலீசாரிடம் மாட்டிக் கொண்டோம்" என்று தெரிவித்துள்ளார்.
கைதான 3 பேரையும் போலீசார் விசாரணைக்குப்பின்னர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.