சென்னை: சிமெண்ட் பலகையால் தெரு நாயை அடித்துக் கொன்றவர் மீது போலீசில் புகார்
சென்னை: வீட்டில் வளர்த்த பறவையின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட ஆத்திரத்தில் சிமெண்ட் பலகையால் தெருநாயை அடித்துக் கொன்றவர் மீது போலீசில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.
கடந்த ஞாயிறன்று காலை சென்னை கங்கை அம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவர் கையில் சிமெண்ட் பலகையை எடுத்துக் கொண்டு சென்றதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். நேராக தெருநாய் ஒன்றின் அருகில் சென்ற பாஸ்கர் யாரும் எதிர்பாராத நேரத்தில் பலகையை நாய் மீது போட்டுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அந்த நாய் பலியானது.
இக்காட்சிகளை நேரில் பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அதனைத் தொடர்ந்து மறைத்து வைத்திருந்த கத்தியை கையில் எடுத்த பாஸ்கர் வேறு ஏதாவது நாய் அல்லது பூனை கிடைக்கிறதா எனத் தேடியுள்ளார். அதற்குள் சுதாரித்துக் கொண்ட அப்பகுதி மக்கள் பாஸ்கரை வளைத்துப் பிடித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தகவலறிந்த பிராணிகள் வதை தடுப்பு குழுவினர் போலீசில் புகார் அளித்தனர். புகார் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் பாஸ்கர் வீட்டில் பறவைகள் வளர்த்து வருவதாகவும், கடந்த வாரத்தில் அப்பறவைகள் தாக்கப் பட்டிருந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
மேலும், பறவைகளை தெரு நாய் அல்லது பூனை இவற்றில் ஏதாவது கடித்து இருக்கக் கூடும் என கருதிய பாஸ்கர் அந்த கோபத்தில் தான் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும், விரைவில் அவரைக் கைது செய்வோம் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.