நெல்லை அருகே பயங்கரம்... கொலை செய்த மனைவி உடலுடன் 3 நாட்களாக இருந்த கணவர் கைது
திருநெல்வேலி: நெல்லை அருகே மனைவியை கொலை செய்து விட்டு அந்த உடலுடன் 3 நாட்களாக இருந்த கணவரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை அருகே உள்ள பத்தமடை குண்டலகேசி தெருவைச் சேர்ந்தவர் ஆயிரத்தான். இவர் கட்டிட தொழிலாளியாக பணிசெய்து வந்தார். இவரது மனைவி முத்துமாரி. இவர்களுக்கு நபர்ணா என்ற மகளும், தருண்ராஜா என்ற மகனும் உள்ளனர்.
ஆயிரத்தான் கடந்த ஒரு ஆண்டாக சிறிது மனநலம் பாதிக்கப்பட்டு வேலைக்குச் செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இதனால் முத்துமாரி கூலி வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார்.
இந்நிலையில் கடந்த 12ந் தேதி மனைவியிடம் செலவுக்கு பணம் தருமாறு கேட்டு ஆயிரத்தான் தகராறு செய்துள்ளார். ஆனால் முத்துமாரி பணம் கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த ஆயிரத்தான் அவரது தலையை பிடித்து சுவற்றில் மோதியுள்ளார். இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் முத்துமாரி உயிரிழந்தார்.
இதன் பின்னர் முத்துமாரியின் உடலை கட்டிலில் போட்டு விட்டு கடந்த 3 நாட்களாக தனது 2 குழந்தைகளுடன் எதுவும் நடக்காதது போல் ஆயிரத்தான் இருந்துள்ளார். முத்துமாரி வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரது குழந்தைகளிடம் விசாரித்தனர். விபரம் அறியாத அந்த குழந்தைகள் அம்மா தூங்கிக் கொண்டிருப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.
இந்நிலையில் நள்ளிரவில் வீட்டில் இருந்து தூர்நாற்றம் வீசியதால் சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டார் பத்தமடை போலீஸ் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து சேரன்மகாதேவி டி.எஸ்.பி. ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் எஸ்.ஐ. லோகநாதன் ஆகியோர் வந்து பார்த்தபோது வீட்டுக்குள் முத்துமாரி உடல் அழுகிய நிலையில் கிடந்தது. இதையடுத்து உடலை பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆயிரத்தானை கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.