கிரவுண்டு முழுக்க சில்வர்.. வீரர்களெல்லாம் "சொக்கத் தங்கம்" – ஆலங்காயத்திலிருந்து ஒரு அசத்தல்!!
வேலூர்: உலக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருவதை முன்னிட்டு முழுக்க முழுக்க வெள்ளியால் மைதானம் மற்றும் தங்கத்தால் வீரர்களை உருவாக்கியுள்ளார் தங்க நகைத் தொழிலாளி ஒருவர்.
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கிளைமேக்ஸை நெருங்கி விட்டன. இந்திய ரசிகர்கள் இணையத்தில் விதவிதமாக எதிர்த்து ஆடும் டீம்களை கிண்டல் செய்து போட்டோக்களை போட்டு தங்களது ஆதரவை இந்திய கிரிக்கெட் டீமுக்கு தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில் வெள்ளி, தங்கம் இரண்டையும் பயன்படுத்தி மிகச்சிறிய கிரிக்கெட்மைதானம் ஒன்றை உருவாக்கி ஆச்சர்யப்படுத்தியுள்ளார் நகை செய்யும் தொழிலாளி ஒருவர்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் நகரை சேர்ந்தவர் தங்க நகை தயாரிக்கும் தொழிலாளி சி.எஸ். தேவன். 52 வயதாகும் தேவன் ஆலங்காயம் அருகே மிட்டூரில் உள்ள இந்தியன் வங்கி கிளையில் தங்க நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் தங்கத்தில் மிகச்சிறிய பொருட்களை செய்யும் ஆர்வமுடையவர். தங்கத்தில் மிகச்சிறிய அளவில் பொருட்களை அவ்வப்போது செய்துவருகிறார்.
தற்போது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருவதால் அதுசம்பந்தமாகஏதேனும் செய்ய வேண்டுமென அவருடைய மனதில் எண்ணம் உருவானது. கிரிக்கெட்மைதானத்தை உருவாக்க வேண்டுமென முடிவு செய்து வெள்ளியால் கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கியுள்ளார்.
அதில் கிரிக்கெட் வீரர்களை மிகச்சிறிய அளவில் தங்கத்தை கொண்டு உருவாக்கியுள்ளார். இந்திய அணி வீரர்கள் பீல்டிங் செய்வது போலவும், பாகிஸ்தான் வீரர்கள் பேட்டிங் செய்வது போலவும் அதனை உருவாக்கியுள்ளார்.
சுமார் 73 கிராம் வெள்ளியை கொண்டு கிரிக்கெட் மைதானமும், 4 கிராம் தங்கத்தால் கிரிக்கெட்வீரர்களையும் மிகவும் நுணுக்கமாக உருவாக்கியுள்ளார். சுமார் ஒரு வாரத்தில் 50 மணிநேரம் முயற்சி மேற்கொண்டு அதை உருவாக்கியுள்ளார். அதனை உருவாக்க 15 ஆயிரம் செலவழித்துள்ளார்.
அவருடைய சின்னஞ்சிறிய கிரிக்கெட் மைதானத்தை அப்பகுதி மக்கள்ஆச்சயர்த்துடன் வந்து பார்த்துவிட்டு செல்கின்றனர்.