வீட்டை காலி செய்ததில் தகராறு - பெண்ணின் போட்டோவை பேஸ்புக்கில் தவறாக பதிவிட்ட இளைஞர் கைது
சென்னை: சென்னையில் வீட்டை காலி செய்யும் போது ஏற்பட்ட தகராறில் இளம்பெண் ஒருவரின் புகைப்படத்தை பேஸ்புக்கில் விபசார பெண் என பதிவு செய்து வெளியிட்ட எஞ்சினியர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
அம்பத்தூர் அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேந்தவர் சுந்தர்ராஜன். இவரது மகன் விக்னேஷ்வரன். டிப்ளமோ எஞ்சினியரான இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.இவரது வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டுள்ளார்.
அதில் துலுக்கானம் என்பவர் மனைவி, மகளுடன் ஒன்றரை ஆண்டாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 5 ஆம் தேதி வீட்டை காலி செய்துவிட்டு சென்னை திரு.வி.க நகர் அருகே வெற்றிநகர் பகுதியில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் துலுக்கானம் குடியேறினார்.
அயப்பாக்கம் வீட்டை காலி செய்யும்போது வீட்டு உரிமையாளர் சுந்தர்ராஜன், துலுக்கானம் குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சுந்தர்ராஜனின் மனைவியை துலுக்கானத்தின் குடும்பத்தினர் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் விக்னேஷ்வரன், துலுக்கானத்தின் குடும்பத்தினர் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளார். இதையடுத்து விக்னேஷ்வரன் துலுக்கானத்தின் மகளின் செல்போன் எண்ணை கண்டுபிடித்து அவரது வாட்ஸ் அப்பில் இருந்து புகைப்படத்தை பதிவிறக்கம் செய்துள்ளார்.
அதன் பிறகு தனது பேஸ்புக் பக்கத்தின் மூலம் அவரது புகைப்படத்தை விபசார பெண் என பதிவு செய்துள்ளார். இதையறிந்த துலுக்கானத்தின் மகள் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து திருமுல்லைவாயல் காவல்நிலையயத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விக்னேஷ்வரனை கைது செய்தனர். பின்னர் அவரை அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.