மனைவி திட்டுனா அதுக்காக இப்படியா செய்வீங்க அன்பு??
தனக்குத்தானே கணவன் கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிக் கொண்டார்.
சத்தியமங்கலம்: சில மனைவிகளிடம் மாட்டிக் கொண்டு முழிக்கும் கணவன்களை பார்த்தால் பாவமாத்தான் இருக்கு.
போன வாரம் ஒருத்தர், "என் பொண்டாட்டிகிட்ட என்னால அடி வாங்க முடியல, ரொம்ப வலிக்குது, அவ கிட்ட அடி வாங்கி சாகறதை விட நான் செத்தே போய்டறேன்" என்று போலீசாரிடம் அழுதபடியே சொல்லிவிட்டு எடப்பாடி அரசு மருத்துவமனையில் இருந்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார். ஒருவழியாக அவரை சமாதானப்படுத்தி போலீசார் மீட்டு வந்தார்கள்.
இப்போது சத்தியமங்கலத்தில் இதேபோல ஒரு சம்பவம் நடந்துள்ளது. இது என்னடாவென்றால், இந்த கணவர் தற்கொலையெல்லாம் செய்ய போகவில்லை. அதற்கும் ஒருபடி மேலே போய்விட்டார். அது என்னன்னுதான் பார்ப்போமா?
அஞ்சலி போஸ்டர்
புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள கிராமம் புதுப்பாளையம். இங்கு வசித்து வருபவர் அன்பரசன். 37 வயதான அன்பரசன் ஒரு கட்டிடத்தொழிலாளி. இந்நிலையில் அன்பரசனுக்கு நேற்று ஊர் முழுவதும் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அதில், அன்பரசனின் பெரிய போட்டோ இடம் பெற்றிருந்தது. அந்த போட்டோவுக்கு கீழே, அவர் மரணமடைந்ததற்கு குடும்பத்தினர் இரங்கல் தெரிவிப்பதுபோலவும் வரிகள் இடம் பெற்றிருந்தது.
என்னாச்சு.. என்னாச்சு...
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சொந்தக்காரர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் எல்லாம் துக்கம் விசாரிக்க அன்பரசன் வீட்டுக்கு மாலையுடன் வந்துவிட்டனர். வந்தவர்களுக்கு அதிர்ச்சியோ அதிர்ச்சி! வீட்டுக்குள் அன்பரசன் கட்டிலில் சோர்வாக உட்கார்ந்து கொண்டிருந்தார். "என்ன நீ சாகலையா" என்ற ரேஞ்சுக்கு அவரைப் பார்த்த உறவினர்கள் என்னப்பா நடந்துச்சு என்று விசாரித்தனர்.
நான் சாக போறேன்
அப்போது அன்பரசன், "நான் தண்ணி அடித்துவிட்டு வீட்டுக்கு வந்தேன். என் மனைவி வழக்கமான சண்டையை என்கூட போட ஆரம்பித்துவிட்டாள். சண்டையை ஆரம்பித்தவள் ரொம்ப நேரம் ஆகியும் நிறுத்தவே இல்லை. அதனால் ரொம்ப மனசு ஒடிஞ்சு போச்சு. அதனால எனக்கு நானே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்ட முடிவு செய்து அதற்கான வேலைகளில் இறங்கினேன். போஸ்டர்கள் கையில் கிடைச்சதும், அதனை ஊர் முழுவதும் தானே ஒட்டிவிட்டு வந்துவிட்டேன். இப்போது, சாகலாம் என்று எலி மருந்தையும் தின்றுவிட்டேன்" என்றார்.
வெளியேறினார் அன்பரசன்
இதைக் கேட்டதும் வந்திருந்தவர்களுக்கு இன்னும் தூக்கி வாரி போட்டது. விஷமருந்தி விட்டு கட்டிலில் படுத்துக் கொண்டு சாவகாசமாக பேசி கொண்டிருந்த அன்பரசனை மருத்துவமனையில் சேர்க்க 108 ஆம்புலன்சை வரவழைத்தனர். பின்னர் அதில் ஏற்றி சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சைக்குப் பின்னர் நார்மலானார் அன்பரசன். ஆனால் பாதியிலேயே மருத்துவமனையிலிருந்து வெளியேறி வீட்டுக்குப் போய் விட்டார்.