ஒசூர்-பெங்களூர் நெடுஞ்சாலையில் கிடந்த ஆண் தலை.. விசாரணையில் அவலம் அம்பலம்
ஒசூர்: பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், ஆண் ஒருவரின் தலை மட்டும் தனியாக கிடந்த சம்பவம் ஒசூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஒசூரில் உள்ள பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், டிராபிக் போலீஸ் ஸ்டேஷன் அருகே, ஒரு ஆணின் தலை மட்டும் தனியாக கிடந்ததை நேற்று மதியம் கண்ட, அப்பகுதி மக்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஓசூர் நகர போலீஸார் விரைந்து சென்று அந்த தலையை மீட்டு விசாரணை நடத்தினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. ஆனால், விசாரணையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது.
ஒசூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள, அரசு மருத்துவமனையின் பிரேத பரிசோதனை அறை உள்ளது. இந்த அறையில் இறந்து அடையாளம் தெரியாதவர்களின் தலைகள் மட்டும் தனியாக வெட்டி எடுத்து வைக்கப்பட்டிருக்கும்.
இந்த அறைக்கு போதிய பாதுகாப்பு வசதிகளை மருத்துவமனை நிர்வாகம் செய்யவில்லை. பெரும்பாலான நேரம் இந்த அறையின் கதவுகள் திறந்தே கிடக்கும் அவலமும் அரங்கேறுமாம்.
அந்த அறையில் அடையாளம் காண்பதற்காக வைக்கப்பட்டிருந்த இறந்தபோன ஒருவரின் தலையை அங்கு சென்ற தெருநாய் ஒன்று, கவ்விக்கொண்டு வெளியே எடுத்து வந்து சாலையில் போட்டுள்ளது என்பது தெரியவந்தது.
இதைதொடர்ந்து போலீசார், மருத்துவமனையில் உள்ள மனித தலைகள் வைக்கப்பட்டுள்ள அறையை பாதுகாப்பக் வைக்குமாறு மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்தனர்.