ஈரோடு: சிறுமியை கடத்தி திருமணம் செய்தவருக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை!
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் 17 வயது பெண்ணை கடத்தி மைசூரில் திருமணம் செய்துகொண்டவருக்கு 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம், சென்னிமலை பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (23). கட்டுமானத் தொழிலாளியாக வேலைசெய்து வருபவர். இவர் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இதே பகுதியைச் சேர்ந்த 17 வயது பெண்ணை மைசூருக்கு கடத்திச் சென்று திருமணம் செய்துகொண்டார்.
பின்னர், வேலூர் மாவட்டத்தில் அந்தப் பெண்ணுடன் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதுதொடர்பான தகவல் அறிந்த பெண்ணின் பெற்றோர், மைனர் பெண்ணை கடத்திச் சென்று திருமணம் செய்த சுரேஷை கைது செய்ய வேண்டும் என போலீசில் புகார் செய்தனர்.
இதையடுத்து, பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வேலூருக்கு சென்று அவரை போலீசார் கைதுசெய்தனர். பின்னர் அந்தப் பெண்ணை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சுரேஷ் மீது ஆள்கடத்தல் மற்றும் மைனர் பெண்ணை ஏமாற்றி, திருமணம் செய்தது, சிறுமியருக்கு எதிரான பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் ஈரோடு மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி திருநாவுக்கரசு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டார். சிறுமியை கடத்திய குற்றத்துக்காக 10 ஆண்டுகள் மற்றும் மைனர் பெண்ணை திருமணம் செய்தமைக்காக 2 ஆண்டுகள் என 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடாக ஒரு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.