பெண் கண்டக்டருக்கு போனில் ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்த எலெக்ட்ரீஷியன் கைது
மார்த்தாண்டம்: சென்னையைச் சேர்ந்த பெண் கண்டக்டர் ஒருவருக்கு செல்போனில் ஆபாசமாக பேசி டார்ச்சர் செய்தவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள மருதங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ராபர்ட். சென்னையில் உள்ள ஓட்டல் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி விஜிலா , சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்தில் கண்டக்டராக பணிபுரிகிறார். ஆவடியில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 6 மாதமாக விஜிலாவின் செல்போனில் மர்ம நபர் ஒருவர் ஆபாசமாக பேசி டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார்.
"நான் ராணுவத்தில் வேலை பார்க்கிறேன். உன்னை கடத்திக் கொண்டு போய் விடுவேன்" எனவும் மிரட்டி வந்துள்ளார். வெவ்வேறு எண்களில் இருந்து தொடர்பு கொண்டு விஜிலாவிடம் ஆபாசமாக பேசி வந்துள்ளார். தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்ததால் விஜிலா சென்னை மாநகர கமிஷனரிடம் புகார் செய்தார்.
தொடர்ந்து நாகர்கோவில் வந்து எஸ்பியிடமும் புகார் செய்தார். இதைத் தொடர்ந்து எஸ்பி அலுவலக போலீசார் நடத்திய விசாரணையில், விஜிலாவுக்கு டார்ச்சர் கொடுத்தது குமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள காஞ்சாம்புரத்தை சேர்ந்த ஜெபின் என்பது தெரிய வந்தது.
ஜெபின், எலக்ட்ரீஷியன் வேலை செய்து வருவதை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து, நித்திரவிளை காவல் நிலையத்தில் பேன் பழுதாகி விட்டதாகவும் அதை சரி செய்ய வாருங்கள் என போலீசார் ஜெபினை நைசாக அழைத்தனர். அதை நம்பிய ஜெபின் கட்டிங் பிளேடு, ஸ்குரூ டிரைவர் போன்ற உபகரணங்களுடன் காவல் நிலையத்துக்கு வந்தார். அவரை போலீசார் கைது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.