குடித்துவிட்டு ”குடிகார” மகனைக் கொல்ல முயன்ற தந்தை- போலீசாரால் கைது
சேலம்: சேலத்தில் குடிகார மகனை கொல்ல முயன்ற குடிகாரத் தந்தை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே உள்ள சின்னப்பம்பட்டி ஊராட்சி முனியம்பட்டி கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி செல்வம். இவரது மகன் ஆனந்தராஜ் ஒரு விசைத்தறி தொழிலாளி.
இவர்களில் தந்தை, மகன் இருவரிடமும் குடிப்பழக்கம் உள்ளது. இந்நிலையில் செல்வம் தனக்கு சொந்தமான 50 சென்ட் நிலத்தை விற்க கடந்த இரண்டாண்டாக முயற்சி செய்து வருகிறார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து சொத்தை பிரித்து தரும்படி மகன் ஆனந்தராஜ் தகராறு செய்து வந்துள்ளார்.
வழக்கம் போல போதையிலிருந்த இருவருக்கும் இடையே நேற்று முன்தினம் இரவு 7.45 மணியளவில் தந்தைக்கும், மகனுக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த செல்வம் மகன் ஆனந்தராஜை மண்வெட்டியால் வெட்டியுள்ளார்.
இதில் தலையில் பலத்தகாயமடைந்த ஆனந்தராஜ், சேலத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, மகுடஞ்சாவடி போலீஸார் வழக்கு பதிந்து கொலை முயற்சி பிரிவின் கீழ் செல்வத்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.