அதிமுக கவுன்சிலர் முல்லை ஞானசேகர் கொலையின் பின்னணியில் ரூ. 250 கோடி நிலம்?
சென்னை: சென்னை மாநகராட்சியின் 21வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் முல்லை ஆர். ஞானசேகர் வெட்டி கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் 250 கோடி ரூபாய் மதிப்பிலான இடம் தொடர்பான பிரச்னை இருந்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
மணலி, அண்ணா 3வது தெருவை சேர்ந்தவர் முல்லை ஞானசேகர், 58. சென்னை மாநகராட்சி 21வது வார்டு கவுன்சிலராகவும், திருவொற்றியூர் பகுதி அதிமுக அவைத் தலைவராகவும் இருந்தார். கடந்த 9ம் தேதி ஞானசேகர் வெட்டி கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில், மாதவரம் பால்பண்ணையை சேர்ந்த பிரபல ரவுடி ஜெபக்குமார், ராஜேஷ், ராஜீவ், பிரபு ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில், அதே பகுதியை சேர்ந்த குமரவேல், மாத்தூர் எம்எம்டிஏவை சேர்ந்த முத்துராஜ் ஆகியோரை கைது செய்தனர்.
இக்கொலையில் மணலி, பெரியதோப்பு பகுதியை சேர்ந்த ஐஜேகே பிரமுகர் விஜய் ஆனந்த், மணலியை சேர்ந்த குதிரை வெங்கடேஷ், கார்த்திக், கணேஷ், ரபீக், கானா சுரேஷ், மதுரை சுரேஷ் ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரிந்தது. இதையடுத்து குதிரை வெங்கடேஷ், கார்த்திக், கணேஷ், கானா சுரேஷ், மதுரை சுரேஷ் ஆகியோரை போலீசார் பிடித்தனர்.
தொடர்ந்து வாலாஜாபாத் பகுதியில் தனது நண்பரின் வீட்டில் பதுங்கியிருந்த விஜய் ஆனந்த்தை சுற்றி வளைத்து கைது செய்தனர். பிடிபட்ட விஜய் ஆனந்தை சென்னைக்கு கொண்டு வந்த போலீசார் தீவிர விசாரனை நடத்தினர். அதில், முல்லை ஞானசேகர் கொலை பின்னணியில் இருக்கும் முக்கிய பிரமுகர்கள் பற்றி விஜய் ஆனந்த் தகவல் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பல அரசியல் பிரமுகர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே கார்த்திக், கணேஷ், கானா சுரேஷ், மதுரை சுரேஷ் ஆகிய நான்கு பேரையும் போலீசார் திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
போலீசாரால் தேடப்படும் லிஸ்ட்டில் இருந்த முக்கிய நபர்களான விஜய் ஆனந்த், ரபீக் ஆகியோரில் விஜய் ஆனந்த் பிடிபட்டு விட்டார்.அரசியல் கட்சியொன்றின் மாவட்டச் செயலாளரான இவருக்கும் சிறையில் இருக்கும், பி.வி.காலனி சோமுவுக்கும் உள்ள நெருக்கம் குறித்து இதே வழக்கில் சிக்கிய குதிரை வெங்கடேஷ் உள்பட பலரும் ஒரே மாதிரியாகச் கூறியுள்ளனர்.
எரித்துக் கொல்லப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. எம்.கே.பாலன் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் சோமு மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் ஞானசேகர் கொலையின் பின்னணியில் பெரிய கூலிப்படைகள், சம்மந்தப்பட்டிருக்கும் வாய்ப்பு உள்ளதாகவும் போலீசார் கருதுகின்றனர்.
சோமுவை கஸ்டடிக்கு கொண்டு வந்து விசாரித்தால் மட்டுமே, போலீசாரின் சந்தேகப் பட்டியலில் இருக்கும் மாஜி.கவுன்சிலர், ரியல் எஸ்டேட் புள்ளி, நகரின் முக்கிய அரசியல் பிரமுகர் குறித்த அடுத்தடுத்த விவகாரங்கள் பற்றிய தகவல் கிடைக்கலாம் என்று தெரிவிக்கின்றனர் போலீசார்.
கொலை நடந்த அன்று, ஞானசேகரின் நண்பர் கடையில் இருந்த சிசிடிவி காமிரா பதிவில் சிக்கியவர்களை மணலி போலீசார் கைது செய்து பொன்னேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில் அவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
வடசென்னையின் புறநகர்ப் பகுதிகளான மணலி, எண்ணூர், திருவொற்றியூர், மாதவரம் போன்ற பகுதிகளில் தனியார் மற்றும் மத்திய அரசு நிறுவனங்கள் அதிகமாக உள்ளன.
இந்த கம்பெனிகளில் இருந்து, அரசியலில் பலம் பொருந்தியவர்களுக்கும், தாதாக்களுக்கும் கேட்டதை விட அதிகமாக கிடைக்கிறதாம்.அதனால் இந்தப் பகுதியில் அரசியல் மற்றும் அதிகார தலையீடுகள் அதிகமாம்.
கொலை செய்யப்பட்ட அதிமுக கவுன்சிலர் முல்லை ஞானசேகர், அரசியல் தவிர ரியல் எஸ்டேட் மீடியேட்டராகவும் இருந்து வந்துள்ளார். சில கம்பெனிகளின் வரவு செலவுகளிலும் ஞானசேகர் 'மீடியேட்' செய்து வந்திருக்கிறார் என்கிறது போலீஸ் தரப்பு.
தமிழக முதல்வரே, ஞானசேகர் கொலையின் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவோம்" என்று சொல்லியிருக்கிறார். எனவே நாங்கள் ஒவ்வொரு அடியையும் இந்த வழக்கில் கவனமாக எடுத்து வைக்கிறோம் என்று போலீசார் கூறியுள்ளனர். இந்தக் கொலை வழக்கை மிகவும் துல்லியமாக விசாரித்து, அதில் கொஞ்சமும் பிசகாமல் கொண்டு போய்க் கொண்டிருக்கிறோம்.
கொலையின் பின்னணியில் 250 கோடி ரூபாய் மதிப்பிலான 'இடம் தொடர்பான' பிரச்னை இருந்திருப்பதைக் கண்டு பிடித்துள்ளோம். இன்னும் இரண்டொரு நாளில் ஞானசேகர் கொலையாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி விடுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர் போலீசார்.