பொய்த்துப் போனாயே பருவ மழையே.... தவிப்பில் மானாமதுரை விவசாயிகள்!
மானாமதுரை: பருவமழை பொய்த்துப் போனதால் மானாமதுரை மற்றும் திருப்புவனம் ஒன்றியங்களில் வாடும் பயிரை காப்பாற்ற விவசாயிகள் ஏற்றம் இறைத்து தண்ணீர் பாய்ச்சுகின்றனர்.
தை பொங்கலை குறிவைத்து ஆகஸ்ட் கடைசி வாரத்தில் நடவு பணிகளை தொடங்கும் விவசாயிகள் ஜனவரி முதல் வாரத்தில் அறுவடை செய்து விடுவார்கள்.
ஆனால் தற்போது பருவமழை தவறி பெய்ததால் நடவு பணியை விவசாயிகள் இப்போதுதான் ஆரம்பித்துள்ளனர். இயற்கையை நம்பி பணிகளை மேற்கொள்ளும் விவசாயிகள் நாற்று நட, களையெடுக்க, உரம் இட உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பெரும்பாலும் கூலித் தொழிலாளர்களையே நம்பியிள்ளனர்.
கை இறவை நீர்
நாற்றங்காளுக்கு தண்ணீர் பாய்ச்ச கண்மாய் மடையில் இருந்து வெளியேறும் தண்ணீரை மர இறவை மூலம் வயலுக்கு பாய்ச்சுகின்றனர். மின் மோட்டார் மற்றும் கிணற்று பாசனம் இல்லாததால் கை இறவை மூலம் நீர் பாய்ச்சுகின்றனர்.
குறைந்த தண்ணீர்
இது தவிர தற்போது கண்மாய்களில் 10நாட்களுக்கு உரிய நீர்தான் உள்ளது. அடுத்த சில தினங்களில் மழை பெய்தால் மட்டுமே விவசாயம் செழிக்கும். விவசாயிகள் பலரும் ஏக்கருக்கு 30ஆயிரம் வரை செலவழித்துள்ளனர்.
அதிகரித்த கூலி
சொக்கநாதிருப்பு கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்ற விவசாயி கூறும் போது இங்கு நிலத்தடி நிர்மட்டம் -குறைவு. மழை பெய்தால் கண்மாய் நிரம்பும். சமீபத்தில் கண்மாயை தூர் வாரியதால் மழை காரணமாக தண்ணீர் தேங்கியுள்ளது. அதனை நம்பி நடவு செய்துள்ளோம். ஏற்றம் மூலமாகத்தான் தண்ணீர் பாய்ச்ச வேண்டும் ஏக்கருக்கு நான்கு பேர் சேர்ந்து தண்ணீர் இறைத்தால்தான் வயல் நிரம்பும், கூலி தொழிலாளர்கள் 400ரூபாய் கூலி கேட்கின்றனர் என்றார் .
தண்ணீர் பற்றாக்குறை
பாலாமணி என்பவர் கூறும் போது மழையை நம்பி நடவு செய்துள்ளோம், ஏக்கருக்கு 30ஆயிரம் வரை செலவழித்துள்ளோம், இறைவை கூலி 400 முதல் 500 ரூபாய் வரை கேட்கின்றனர் என்றார். அல்லிநகரத்தைச் சேர்ந்த ஆறுமுகம் கூறுகையில் மழை பெய்தால் கண்மாயில் தண்ணீர் தேங்கும், பெய்த மழையை நம்பி நடவு செய்துள்ளோம், மோட்டார் வைத்திருப்பவர்களை நம்பி அடுத்த பணியை பார்க்க வேண்டும், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டபடியால் மோட்டார் வைத்திருப்பவர்களுக்கே தண்ணீர் பற்றாக்குறை உள்ளது என்றார்.
மழை இல்லை
அரசு சார்பாக மழை அளவு நகர்ப்புறத்தில் மட்டுமே கணக்கெடுக்கப்படுகிறது. திருப்புவனத்தில் பெய்த மழையளவை வைத்து இவ்வட்டாரத்தில் நல்ல மழை பெய்துள்ளது என அதிகாரிகள் அரசுக்கு தெரியப்படுத்துகின்றனர். ஆனால் கிராமப்புறங்களில் அந்தளவு மழை பெய்யவில்லை என்பதுதான் உண்மை.
குறைந்து போன விவசாயம்
அரசு அதிகாரிகளின் கணக்குப்படி பார்த்தால் திருப்புவனம் வட்டாரத்தில் உள்ள அனைத்து கண்மாய்களும் நிரம்பி விவசாயிகள் நடவுப்பணியில் ஈடுபட்டிருக்க வேண்டும். ஆனால் அல்லிநகரத்தில் 150ஏக்கரில் கடந்தாண்டு நெல் பயிரிடப்பட்டது.
இந்தாண்டு வெறும் 40ஏக்கரில் மட்டும் நடவு பணி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இதே போல ஒவ்வொரு கிராமத்திலும் விவசாய பணிகள் மூன்றில் ஒரு பங்கு குறைந்துள்ளது. எனவே அதிகாரிகள் கிராமப்புற பகுதிகளில் பெய்யும் மழையளவையே அரசுக்கு தெரியப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.