அனுமதி கொடுங்கள், மாலையில் நடக்கும் கூட்டத்திற்கு செல்கிறேன்: மானாமதுரையில் கமல்!
Recommended Video
சென்னை : மக்களின் அனுமதியோடு மாலையில் நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு செல்கிறேன் என்று நடிகர் கமல்ஹாசன் மானாமதுரை மக்கள் மத்தியில் சில விநாடிகள் மட்டுமே பேசிவிட்டு அவசர அவசரமாக புறப்பட்டார்.
அரசியல்வாதியாக மாறியுள்ள நடிகர் கமல்ஹாசன் காலை முதல் ராமேஸ்வரம் முதல் மதுரை வரை சூறாவளி அரசியல் பயணம் செய்து வருகிறார். ராமேஸ்வரத்தில் கலாம் வீடு, நினைவிடம், மீனவர்கள் மத்தியில் பேச்சு என்று சுழன்று வருகிறார் கமல்ஹாசன்.
தொடர்ந்து ராமநாதபுரம், பரமக்குடி, கடைசியாக மானாமதுரையில் கூடி இருந்த மக்களை சந்தித்தார். கமலின் வருகையை எதிர்பார்த்து பல்லாயிரக்கணக்கான மக்கள் கூட்டம் அறிவிக்கப்பட்ட இடங்களில் கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் காத்திருந்தனர். ஆனால் கமலின் பயணத்திற்கு சரியான திட்டமிடல் இல்லை என்பது அவர் மின்னல் வேகத்தில் மக்களை சந்தித்து பேசிவிட்டு செல்வதில் இருந்து தெரிகிறது.
ராமநாதபுரம் அரண்மனை முன்பு கூடியிருந்த மக்கள் முன் மேடையேறி பேசிய கமல், பரமக்குடி, மானாமதுரையில் மேடைக்குக் கூட செல்லாமல் காரில் இருந்த படியே மக்கள் மத்தியில் பேசினார். மானாமதுரையில் கமலைக் காண திரண்டிருந்த மக்கள் முன்னிலையில் பேசிய கமல் அனைவரின் அன்புக்கும் நன்றி, இந்த அன்புக்காகத் தான் இங்கே வந்தேன். 1996க்குப் பிறகு மானாமதுரைக்கு வருகிறேன் உங்களிடம் அனுமதி வாங்கிக் கொண்டு மாலையில் நடக்கும் கூட்டத்திற்கு செல்கிறேன் என்று மட்டும் கூறி விட்டு கமல் அவசரஅவசரமாக புறப்பட்டார். கமலின் பேச்சை கேட்க ஆவலோடு காத்திருந்த மக்கள் அவரின் மின்னல் வேக பேச்சால் அதிருப்தியடைந்தனர்.