துபாயில் இறந்த மானாமதுரை இளைஞரின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு.. நன்றி ஈமான்
திருச்சி : துபாயில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மானாமதுரை அருகேயுள்ள மூங்கிலூரணியைச் சேர்ந்த வேட்டையர் ஆறுமுகம் (45) டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 10.07.2018 அன்று உடல் நலக் குறைவால் துபாயில் மரணமடைந்தார்.
இதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் ஈமான் அமைப்புக்கு உடலை சொந்த ஊருக்கு கொண்டு வந்து தர கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை தொடர்ந்து ஈமான் அமைப்பின் தலைவர் அல்ஹாஜ் பி.எஸ்.எம். ஹபிபுல்லா, பொதுச்செயலாளர் ஏ. ஹமீது யாசின் ஆகியோரது ஆலோசனையின் பேரில் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத் அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டார்.
அந்த நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர், தமிழகத்தைச் சேர்ந்த அலுவலர்கள் ஜாஹிர், பஷீர், பசாம் உள்ளிட்டோர் சொந்த ஊருக்கு உடலை கொண்டு செல்ல தேவையான உதவிகளை விரைவாக செய்து கொடுத்தனர். அதன் அடிப்படையில் அவரது உடல் நேற்று 18.07.2018 புதன்கிழமை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு 19.07.2018 வியாழக்கிழமை அதிகாலை திருச்சி விமான நிலையத்தில் அவரது மைத்துனர் ராஜாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
வேட்டையர் ஆறுமுகம் உடலை விரைவாக ஒப்படைக்க உதவிய ஈமான் அமைப்பு, அவர் வேலைபார்த்த நிறுவனம், இந்திய துணைத் தூதரகம், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அலுவலர்கள் ஆகியோருக்கு அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.
இதுபோன்று துபாயில் எதிர்பாராதவிதமாக மரணமடைபவர்களது உடல்களை துபாயில் அடக்கம் செய்யவோ அல்லது சொந்த ஊருக்கு கொண்டு வர தேவையான உதவிகளை பெற 00971 50 51 96 433 / 00971 50 4753052 ஆகிய எண்களை வாட்ஸ் அப் மூலம் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
தகவல் - முதுவை ஹிதாயத்