10 பேரை காவு வாங்கிய மணப்பாடு படகு விபத்து.. படகோட்டி கைது
மணப்பாடு படகு விபத்தில் படகை இயக்கியதாக செல்வம் என்பவரை குலசேகரன்பட்டிணம் காவல்துறையினர் கைது செய்தனர்.
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் பலியானதைத் தொடர்ந்து அந்தப் படகை இயக்கிய செல்வம் என்பவரை போலீஸார் இன்று கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகேயுள்ள மணப்பாடு பகுதியில் 20-க்கும் மேற்பட்டோர் மீனவர் படகில் கடலுக்கு சுற்றுலா சென்றனர். அப்போது காற்றின் வேகம் அதிகரித்ததால் பாரம் தாங்காமல் படகு கடலுக்குள் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தைத் தொடர்ந்து படகின் உரிமையாளர் கெவினை கடந்த சில தினங்களுக்கு முன்பு போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த படகின் ஓட்டுனர் செல்வத்தை குலசேகரபட்டினம் போலீசார் இன்று கைது செய்துள்ளனர் மீன் பிடிக்கும் படகில் அனுமதியின்றி 20-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சென்றதால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. சுற்றுலா படகை இயக்க அப்பகுதியில் அனுமதி கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.