ஆளுங்கட்சிக்காரரை அடித்து துவைத்து சட்டையை கிழித்த இன்ஸ்பெக்டர்.. இடமாற்றம்
அதிமுக நிர்வாகியை தாக்கிய இன்ஸ்பெக்டர் காத்திருப்பு பட்டியலில் உள்ளார்.
மணப்பாறை: ஆளுங்கட்சிக்காரர்களை அரசு பதவியில் இருப்பவர்கள் பகைத்துக் கொண்டால் தூக்கி அடிக்கத்தான் படுவார்கள் போல.
மணப்பாறை அருகே கருங்குளம் என்ற ஊரை சேர்ந்தவர் பழனிசாமி. இவர் அதிமுககாரர். முன்னாள் ஒன்றிய சேர்மன். எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட துணைச்செயலாளராக இருக்கிறார். இதைவிட முக்கியம், 4 முறை மாவட்ட கவுன்சிலராக இருந்தவர். அதனால் அந்த பகுதியில் இவருக்கு ரொம்ப செல்வாக்கு!
அவசரமாக கிளம்பறேன்
இந்நிலையில் சொந்த பிரச்சனை குறித்து பேச மணப்பாறை காவல் நிலையத்துக்கு இரவு வந்தார். அப்போது ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் கென்னடி, "நான் இப்போ டிஎஸ்பி-யை பாக்க அவசரமா கிளம்பிட்டு இருக்கேன். அதனால போய்ட்டு வந்து உங்ககிட்ட பேசறேன்" என்றார்.
நான் தெரியும் இல்ல?
இப்படி இன்ஸ்பெக்டர் சொன்னதும் பழனிச்சாமிக்கு கோபமும், ஆத்திரமும் வந்தது. "நான் யார் தெரியும் இல்ல? நான் ஆளும்கட்சிகாரன், மாவட்ட செயலாளராக இருந்தவன், என்கிட்ட என்ன பிரச்சனைன்னு கூட கேட்காம வெளியே கிளம்பி போனால் என்ன அர்த்தம்?" என்று சத்தம்போட்டார்.
நடவடிக்கை எடுக்க மாட்டியா?
அதற்கு இன்ஸ்பெக்டரும், "அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல சார்... அவசரமா வெளியே போகிறேன்... உடனே வந்துடறேன்... நீங்க கம்ப்ளைண்ட் மட்டும் கொடுங்க" என்றார். இன்ஸ்பெக்டர் கென்னடி இப்படி சொன்னதும் பழனிசாமி ஆவேசத்துக்கு போய்விட்டார். "என்னயா... நான் சொல்லிட்டே இருக்கேன்... நடவடிக்கை எடுக்க மாட்டியா?" என்று ஒருமையில் கத்தினார்.
சட்டை கிழிந்தது
இப்போது இன்ஸ்பெக்டர் கென்னடியும், "என் ஸ்டேஷன்ல வந்து என்னையே மரியாதை இல்லாம பேசுறீயா?" என்று கூறி பழனிச்சாமியை சரமாரியாக அடித்து உதைத்தார். ஸ்டேனில் வைத்து தாக்குதல் நடத்தியதால் பழனிசாமி நிலை குலைந்து போனார். என்னசெய்வதென்று தெரியாமல் கதறி அழுதார். இதில் அவரது சட்டையும் தாறுமாறாக கிழிந்து தொங்கியது. கொஞ்ச நேரத்தில் முகமெல்லாம் வீங்கிபோய்விட்டது.
தர்ணாவில் பழனிசாமி
உடனே கிழிக்கப்பட்ட சட்டையுடன் ஸ்டேஷனுக்கு வெளியே ஓடிவந்தார். அங்கேயே ஸ்டேஷன் வாசலிலியே தர்ணாவில் உட்கார்ந்தார். அதோடு பழனிசாமியுடன் இருந்த ஆதரவாளர்களும் இந்த தகவலை வையம்பட்டி, மருங்காபுரி போன்ற ஊருக்குள் சொல்லவும், நூற்றுக்கணக்கானோர் ஸ்டேஷனுக்கே நடுராத்திரி வந்துவிட்டனர். எல்லோரும் சேர்ந்து இன்ஸ்பெக்டர் கென்னடியை கைது செய்ய வேண்டும் கோஷம் போட்டனர்.
2 மணி நேரம் தர்ணா
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணப்பாறை டிஎஸ்பி ஆசைத்தம்பி வந்துவிட்டார். சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். பழனிசாமியோ எதற்குமே மசியவில்லை. தர்ணாவிலேயே குறியாக இருந்தார். இன்ஸ்பெக்டர் கென்னடி மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கிறேன் என்று சொன்னபிறகு, 2 மணி நேரம் கழித்து ஒருவழியாக பழனிசாமி தர்ணாவை வாபஸ் பெற்றனர்.
காத்திருப்போர் பட்டியல்
இதற்கு நடுவில் கட்சிக்காரர்கள் அனைவரும் சேர்ந்து புறநகர் மாவட்ட செயலாளர் ரத்தினவேலிடம் புகார் சொன்னார்கள். இந்த புகார் ஐஜி வரதராஜிடம் போனது. ஐஜியும், பழனிசாமியை அடித்தது உண்மைதான் என்பதை உளவுத்துறை மூலம் உறுதிபடுத்திக் கொண்டார். பிறகு என்ன? இன்ஸ்கென்னடி இப்போது காத்திருப்போர் பட்டிலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட இன்ஸ்பெக்டர் "தானா சேர்ந்த கூட்டம்" படம் பார்த்திருப்பாரோ!