மாண்டலின் ஸ்ரீநிவாஸ் மறைவு: ஸ்டாலின்,இளையராஜா, அஞ்சலி: பெசன்ட் நகரில் உடல்தகனம்
சென்னை: பிரபல கர்நாடக இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று காலமானார். அவரது உடலுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்ட இசையுலகின் பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பிரபல கர்நாடக இசைக் கலைஞர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் (45). அவருக்கு கல்லீரல் பிரச்சினை இருந்ததால் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, சென்னை தனியார் மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சேர்க்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அவர் உடல்நிலை மோசமடைந்ததைத் தொடர்ந்து நேற்று காலை 9.30 மணி அளவில் காலமானார்.
அவரது உடல் வடபழனி தனலட்சுமி காலனி, வெங்கடேஸ்வரன் தெருவில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
மு.க.ஸ்டாலின், இளையராஜா
அவரது உடலுக்கு இசையமைப்பாளர்கள் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இசையமைப்பாளர்கள் இளையராஜா, தேவி ஸ்ரீ பிரசாத், பாடகர் மனோ, பாடகி எஸ்.பி.சைலஜா, டிரம்ஸ் சிவமணி மற்றும் வீணை காயத்ரி, உள்ளிட்ட கர்நாடக இசைக் கலைஞர்கள் மற்றும் திரையுலகினர், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
ஆளுநர் ரோசய்யா
மாண்டலின் ஸ்ரீநிவாஸின் திடீர் மறைவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று ஆளுநர் ரோசய்யா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், சிறந்த மாண்டலின் கலைஞரான அவர் உலகெங்கிலும் நமது நாட்டின் புகழ் பரவச் செய்தவர். மாண்டலின் என்றாலே அவரது நினைவுதான் நமக்கு வரும். அவரது அற்புதமான இசையினால் அனைவரையும் மயக்கி வைத்திருந்தார். மாண்டலின் மேதையின் அகால மறைவால், கர்நாடக இசையுலகில் ஒரு பெரும் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது. அவரது குடும்பத்தினருக்கும், அவரது ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழிசை சவுந்தரராஜன்
பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், எவரும் பயன்படுத்தாத மேற்கத்திய வாத்தியமான மாண்டலினை தனது சின்னஞ்சிறு வயதிலேயே பயன்படுத்தி அசத்தியவர் மாண்டலின் ஸ்ரீநிவாஸ். மாபெரும் இசைக் கலைஞர்கள் கொண்ட கர்நாடக இசை சாம்ராஜ்யத்தை தனித்துவ இசையால் தன் வசம் இழுத்தவர் இன்று இல்லை என்பதை நம்ப முடியவில்லை. மாண்டலின் ஸ்ரீநிவாஸை இழந்து வாடும் அவரது குடும்பத்துக்கு எனது சார்பிலும் பாஜக சார்பிலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
பெசன்ட்நகரில் இறுதிச்சடங்கு
மாண்டலின் ஸ்ரீநிவாஸின் அஞ்சலிக்குப் பின்னர் 3 மணிக்கு அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பெசன்ட் நகர் மயானத்தில் எரியூட்டப்பட்டது. பின்னர் இறுதிச் சடங்குகளும் அங்கு நடைபெற்றன.