ஜெ.வை சந்திக்க இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீர முயற்சி
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீர அனுமதி கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
சட்டசபை தேர்தலில் வென்று ஆட்சியை தக்க வைத்துக் கொண்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு மங்கள சமரவீர வாழ்த்து தெரிவித்திருந்தார். அதேபோல் இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரனும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
சில நாட்களுக்கு முன்னர் விக்னேஸ்வரனுக்கு நன்றி தெரிவித்த ஜெயலலிதா, விரைவில் சந்திப்போம் எனவும் கூறியிருந்தார். இந்த நிலையில் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமரவீரவும் ஜெயலலிதாவை சந்திக்க அனுமதி கோரியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆனால் தமிழக அரசு தரப்பில் இது தொடர்பாக எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. மும்பையில் ஜூன் 13,14 ஆகிய தேதிகளில் நடைபெறும் கருத்தரங்கில் கலந்து கொள்ள மங்கள சமரவீர இந்தியா வருகை தர உள்ளார்.
ஈழத் தமிழர் படுகொலை விவகாரத்தில் இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்; ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக பிரகடனப்படுத்த வேண்டும் என கடந்த ஆட்சிக் காலத்தில் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர் ஜெயலலிதா. அத்துடன் இலங்கை வீரர்களை தமிழகத்துக்குள் அனுமதிக்க கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தவர். தமிழக வீரர்கள் இலங்கைக்கு விளையாட சென்ற போதும் திருப்பி அழைத்ததுடன் அதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்தவர் ஜெயலலிதா. இந்த நிலையில் மங்கள சமரவீர சந்திக்க முயற்சித்தாலும் ஜெயலலிதா அனுமதி கொடுக்கமாட்டார் என்றே கூறப்படுகிறது.