சிவாஜிக்கு மணி மண்டபம்... ஜெயலலிதாவுக்கு பிரபு நன்றி!
மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று அறிவித்ததற்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார் சிவாஜி மகன் பிரபு.
ஜெயலலிதாவின் அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரபு கூறுகையில்:
எங்கள் தந்தை சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று முதல்வர் அம்மா அறிவித்து இருப்பது எங்கள் குடும்பத்தினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் திலகத்தின் லட்சக்கணக்கான ரசிகர்களும் மகிழ்ச்சியில் திளைத்துப் போய் இருக்கிறார்கள்.
எங்களின் உச்சியை குளிர வைத்த அம்மாவுக்கு எனது சார்பிலும், அண்ணன் ராம்குமார் சார்பிலும், மகன் விக்ரம்புரபு சார்பிலும் மற்றும் குடும்பத்தினரின் அனைவரது சார்பிலும், ரசிகர்கள் சார்பிலும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.