மணிசங்கர் அய்யர் கோவை வந்தால் அவர் நாக்கை அறுப்போம்- பாஜக பகிரங்க மிரட்டல்
கோவை: கோவையில் பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக பேசிய மணிசங்கர் அய்யர் தப்பித்தவறி கோவை வந்தால் அவரின் நாக்கை அறுப்போம் என்று கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் ஜி.கே.செல்வகுமார் பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பிரதமர் மோடி குறித்து அவதூறு கூறியதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான மணிசங்கர் அய்யர் மீது புகார் எழுந்துள்ளது. மணிசங்கர் அய்யரின் இந்த பேச்சை கண்டித்து பா.ஜ.க.வினர் தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் கோவை காந்திபுரத்தில் பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் மணிசங்கர் அய்யரை கண்டித்து கோஷங்கள் எழுப்பியதுடன், அவர் படத்தை செருப்பால் அடித்தும் பா.ஜ.க.வினர் போராட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய பா.ஜ.க மாநிலப் பொதுச்செயலாளர் ஜி.கே.செல்வக்குமார், "பாகிஸ்தான் தொலைக்காட்சிக்கு மணிசங்கர் அளித்த பேட்டி மிக கொடூரமானது. எப்போது ஆட்சிக்கு வருவீர்கள் என கேள்விக்கு பதிலளித்த மணிசங்கர் அய்யர் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் முடிவு செய்தால் நாங்கள் சீக்கிரம் ஆட்சிக்கு வருவோம்" என்று மோடி கண்டிப்பாக கொல்லப்பட்டு விடுவார் என்கிற ரீதியில் பேசியிருக்கிறார். இது மிகவும் கேவலமான பேச்சு.
இப்படி பேசிய மணிசங்கர் அய்யர் கோவைக்கு வரும்போது அவரை முற்றுகையிட்டு அவர் நாக்கை துண்டிப்போம் என்று ஆவேசமாக கூறினார். இதனால் பா.ஜ.கவினர் மட்டுமின்றி அங்கு கூடியிருந்தவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அதைத் தொடர்ந்து செல்வக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மணிசங்கர் அய்யர் நாக்கை அறுப்போம் என நீங்கள் பேசினீர்களே என்று கேட்டதற்கு "மணிசங்கர் அய்யர் கோவைக்கு வந்தால் நாங்கள் அது மாதிரி செய்வோம்" என்றார்.
எது மாதிரி செய்வீர்கள் என்று திரும்பவும் செய்தியாளர்கள் கேட்க, ''பேட்டி கொடுக்கும்போது அதை எல்லாம் சொல்ல முடியாது" என்று சிரித்துக் கொண்டே மழுப்பியுள்ளார். எனினும், தடையை மீறி நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க.வினர் 59 பேர் கைதாகி, பின்னர் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.