தமிழிசையும் பொன்னாரும் தமிழின துரோகிகள்: மணியரசன் கடும் குற்றச்சாட்டு
தமிழிசையும் பொன்னாரும் தமிழின துரோகிகள் என்று மணியரசன் கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
Recommended Video
சென்னை: பாஜக மாநில தலைவர் தமிழிசையும் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனும் தமிழின துரோகிகள் என்று மணியரசன் கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
தமிழகத்துக்கு தண்ணீர் தராத கர்நாடகத்துக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு கன்னடர் ஒருவரை துணை வேந்தராக நியமித்ததற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.
இதுகுறித்து விளக்கம் கேட்க பாரதிராஜா, கவுதமன், அமீர் உள்ளிட்டோர் நேற்றைய தினம் ஆளுநர் மாளிகைக்கு சென்றிருந்தனர். சூரப்பா நியமனத்தில் எந்த விதிமீறலும் இல்லை என்று ஆளுநர் கூறியதாக பாரதிராஜா தெரிவித்தார்.
இந்நிலையில் பாரதிராஜா, மணியரசன் உள்ளிட்டோர் இன்று செய்தியாளர்களை கூட்டாக சந்தித்தனர். அப்போது தமிழர்கள் ஊழல் செய்வதால்தான் வெளிமாநிலத்தவரை துணைவேந்தராக நியமனம் செய்துள்ளதாக ஆளுநர் நியமனத்தை நியாயப்படுத்திய தமிழிசை மற்றும் பொன்னார் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
உரிமை கொடுக்காது
அதற்கு மணியரசன் கூறுகையில் தமிழர்கள் ஊழல்வாதிகள் என்றால் இவர்கள் யார். பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை ஆகியோர் பச்சை துரோகம் செய்கிறார்கள். பதவிக்காக எவ்வளவு முயன்றாலும் இவர்கள் இருவருக்கும் பாஜக தலைமை சம உரிமை கொடுக்காது.
ஐபிஎல்லை தடுத்திருக்கலாம்
எட்டி உதைக்கும் காலை தமிழக ஆட்சியாளர்கள் முத்தமிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பச்சைக் கொடி காட்டுவோரை தமிழக மக்கள் துச்சமெனத் தூக்கி எறிவார்கள். தமிழக அரசு நினைத்திருந்தால் ஐபிஎல் கிரிக்கெட்டை தடுத்திருக்கலாம் என்றார் மணியரசன்.
தமிழகத்தில் திறமையானவர்கள் இல்லையா
இதுகுறித்து பாரதிராஜா கூறுகையில் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கன்னடரை ஏன் துணை வேந்தராக்கினீர்கள்? தமிழகத்தில் திறமையானவர்கள் இல்லையா? இதற்கு தமிழக அரசுதான் காரணமா.
மாலை 5 மணிக்கு கூடுவோம்
இசைப்பல்கலைக்கழகம், சட்டப் பல்கலைக்கழகம் எல்லாவற்றிலும் வேறு மாநிலத்தவர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மாலை 5 மணிக்கு சென்னை அண்ணா சிலை அருகே கூட உள்ளோம். ஐபிஎல் போட்டிகளை எதிர்ப்பது தார்மீகக் கடமை. தமிழகம் வரும் பிரதமருக்கு கருப்புக் கொடி காட்டுவோம் என்றார் பாரதிராஜா.