சிவகங்கை அருகே மஞ்சுவிரட்டு விழா.. சீறிப்பாய்ந்த 600 காளைகளை அடக்க முயன்ற 250 காளையர்கள்!
சிவகங்கை அருகே மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது.
Recommended Video
சிவகங்கை: சிவகங்கை அருகே 600-க்கும் மேற்பட்ட காளைகள், 250-க்கும் மாடுபிடி வீரர்கள் பங்கேற்ற மஞ்சுவிரட்டு விழா நடைபெற்றது.
சிங்கம்புணரி அருகே கிருந்தாகோட்டை கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு கலியுக மெய்அய்யனார் கோயில் அமைந்துள்ளது. இங்கு புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு வாடிமஞ்சுவிரட்டு வெகு விமர்சையாக நடைபெற்றது.
இதற்காக சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திருப்பூர், தேனி, இராமநாதபுரம், திண்டுக்கல் பகுதியில்இருந்து 600 க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டன. சுமார் 250 க்கும் மேற்பட்ட மாடுபிடிவீரா்கள் கலந்து கொண்டு, காளைகளை அடக்க முயற்சித்தனர். உரிய மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, காளைகளும், மாடுபிடி வீரா்களும் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் காளைகளை அடக்கிய மாடுபிடிவீரர்களுக்கும், அடக்காத காளையின் உரிமையாளர்களுக்கும், பீரோ, கட்டில், மின்விசிறி, தங்கம் மற்றும் வெள்ளி காசுகளும், ரொக்கப்பணமும் என 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் பரிசுகளாக வழங்கப்பட்டது. இதில் மாடுகள் முட்டியதில் 12 பேருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
மஞ்சுவிரட்டை காண சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆண்களும், பெண்களும் கூடிநின்று உற்சாகமாக கண்டு களித்தனா். இதனை தொடர்ந்து கலியுக மெய் அய்யனாருக்கு கிருங்காக்கோட்டை கிராம மக்கள் புரவிஎடுத்து நேர்த்திக்கடன் செலுத்தும் புரவிஎடுப்பு விழா நடைபெறவுள்ளது.