இது என்ன "பொதுக்கூட்டம்", நாங்க கூட்டப் போறோம் பாருங்க... திவாகரன் தடாலடி!
ஓபிஎஸ், ஈபிஎஸ் நடத்திய பொதுக்கூட்டம் பற்றி எங்களுக்கு கவலையில்லை விரைவில் நாங்கள் கூட்டப் போவது தான் உண்மையான பொதுக்குழு கூட்டம் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் கூறியுள்ளார்.
திருவாரூர் : சசிகலா அனுமிதியுடன் விரைவில் தினகரன் பொதுக்குழு கூட்டத்தை அறிவிக்க உள்ளதாகவும் அதுவே உண்மையான பொதுக்குழு என்றும் சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழு தீர்மானம் குறித்து திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த திவாகரன் கூறியதாவது : அவர்கள் நடத்தியதை நாங்கள் பொதுக்குழுவாகவே நினைக்கவில்லை. அவர்கள் என்ன தீர்மானம் போட்டாலும் அதைப்பற்றி எங்களுக்குக் கவலையில்லை. சசிகலா அனுமதியுடன் அவரால் நியமிக்கப்பட்ட தினகரன் விரைவில் பொதுக்குழுவை கூட்ட உள்ளார். அதற்கான தேதியை அவர் அறிவிப்பார். எங்களைப் பொறுத்த வரையில் அது தான் உண்மையான பொதுக்குழு கூட்டம்.
பொதுக்குழு கூட்டத்திற்காக அமைச்சர்களுக்கு அழைப்பு வந்ததா என்று தெரியவில்லை, ஆனால் நாங்கள் யாரையும் கட்டுப்படுத்தவில்லை. ஆளுநர் உடனடியாக எந்த முடிவையும் எடுக்காததால் தமிழக அரசியலில் நிலையற்ற அசாதாரண சூழல் ஏற்பட்டிருக்கிறது. ஆளுநர் ஏன் காலதாமதம் செய்கிறார் என்று தெரியவில்லை.
ஆட்சியாளர்கள் அதிகாரத்தில் இருப்பவர்கள் மக்கள் பிரச்னை பற்றி கவனத்தில் கொள்ளவில்லை. தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர், அரசு ஊழியர்களும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இல்லாத அமைச்சரவை வேண்டும் இது தான் என்னுடைய விருப்பம் என்னுடைய விருப்பம் மட்டுமல்ல எங்களைச் சார்ந்த அனைவரின் விருப்பமும் அது தான்.
பொதுக்குழுவில் போட்ட தீர்மானம் செல்லுமா செல்லாதா என்பதெல்லாம் நீதிமன்றத்தில் இருக்கும் வழக்குகளும், தேர்தல் ஆணையமும் முடிவு செய்யும். எங்களுக்கு எந்த பயமும் இல்லை என்றும் திவாகரன் தெரிவித்தார்.