உச்சநீதிமன்றம் சாட்டையடி... அமைச்சர் காமராஜ் மீது மன்னார்குடியில் மோசடி வழக்கு பதிவு!
உச்சநீதிமன்றத்தின் சாட்டையடியைத் தொடர்ந்து தமிழக அமைச்சர் காமராஜ் மீது மன்னார்குடி போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சென்னை: உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனத்தைத் தொடர்ந்து தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் மீது மன்னார்குடியில் மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் காமராஜ் ரூ30 லட்சம் மோசடி செய்ததாக ரியல் எஸ்டேட் அதிபர் புகார் தெரிவித்திருந்தார். ஆனால் இப்புகாரின் பேரில் போலீசார் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட குமார் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அமைச்சர் காமராஜ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உத்தரவிட்டது.
ஆனால் போலீசார் அமைச்சர் காமராஜ் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை. இதனால் உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. அமைச்சர் காமராஜ் மீது வழக்குப் பதிவு செய்யாவிட்டால் சிபிஐக்கு விசாரணை மாற்றப்படும் எனவும் உச்சநீதிமன்றம் எச்சரித்தது,
இதனைத் தொடர்ந்து மன்னார்குடியில் அமைச்சர் காமராஜ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த தகவல் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த தமிழக அரசின் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.