மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை.யில் குற்றவியல் படிப்பு.. அமெரிக்க பல்கலையுடன் ஒப்பந்தம்
அமெரிக்க எடின்போரோ பல்கலைக்கழகத்துடன் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் குற்றவியல் படிப்பில் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
நெல்லை: அமெரிக்க எடின்போரோ பல்கலைக்கழகத்துடன் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் குற்றவியல் படிப்பில் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் குற்றவியல்துறை செயல்படுகிறது. கிரிமினாலஜி எனப்படும் இந்த துறையில் எம்.எஸ்சி, மற்றும் பிஎச்டியில் மாணவர்கள் பயில்கின்றனர். அமெரிக்காவில் பென்சில்வேனியாவில் செயல்படும் எடின்போரோ பல்கலைக்கழகத்தின் குற்றவியல் துறையுடன் நெல்லை பல்கலை ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
நெல்லை மாணவர்கள் அமெரிக்கா சென்று பயிலவும், அமெரிக்க மாணவர்கள் நெல்லை வந்து பயிலவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் நெல்லை பல்கலையில், துணைவேந்தர் கி.பாஸ்கர், அமெரிக்க பல்கலை பேராசிரியர் ஜார்ஜ் ரிச்சர்ட்ஸ் ஆகியோரிடையே கையெழுத்தானது.
இதுகுறித்து துணைவேந்தர் பாஸ்கர் கூறுகையில், ''தென்னகத்தில் குற்றவியல் துறை நமது பல்கலையில்தான் சிறப்பாக செயல்படுகிறது. தற்போது நெல்லை வந்துள்ள அமெரிக்க பேராசிரியர் ஜார்ஜ் ரிச்சர்ட்ஸ், தொடர்கொலைகாரர்கள் குறித்து நெல்லை மாணவர்களுக்கு 15 தினங்களுக்கு நடக்கும் பயிலரங்கில் பங்கேற்று பயிற்றுவிக்கிறார்.
ஒரே மாதிரியான கொலைகளை மேற்கொள்வோரின் மனநிலை, அவர்களைப்பற்றிய ஆய்வின் தொடர்ச்சியாக பயிலரங்கம் நடக்கிறது. எனவே இந்த ஒப்பந்தத்தின் மூலம் நெல்லை பல்கலை குற்றவியல் மாணவர்கள் அமெரிக்கா சென்று பயில்வார்கள் என்றார். நிகழ்ச்சியின் போது பதிவாளர் கோவிந்தராஜ், குற்றவியல் துறை தலைவர் பியூலாசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.