தேர்வு கட்டண உயர்வைக் கண்டித்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லை: தேர்வு கட்டண உயர்வை கண்டித்து மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகமாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் ஒரு செமஸ்டருக்கு ஒரு பேப்பருக்கு ரூ.75 வசூலிக்கப்பட்டு வந்தது. இது கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரூ.90 ஆக உயர்த்தப்பட்டது.
இதற்கு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் கட்டணம் பழையபடி ரூ.75 ஆக குறைக்கப்பட்டது. இந்நிலையில் தேர்வு கட்டணம் திடீரென ரூ.75லிருந்து ரூ.110 ஆக உயர்த்தப்பட்டது.
இதனால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுபோல் பணகுடி மனோ கல்லூரியை சேர்ந்த மாணவர்களுக்கும் மாலை திடீரென போராட்டத்தில் குதித்தனர்.
இந்த போராட்டம் குறித்து இந்திய மாணவர் சங்க மாநில பொது குழு உறுப்பினர் கூறுகையில், தேர்வு கட்டணத்தை குறைக்கும் வரை தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டம், பல்கலைக்கழக வருவாயை பெருக்க பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்த உள்ளோம் என்று தெரிவித்தார்.
இதே போன்று நெல்லை பேட்டை மதிதா இந்து கல்லூரி மாணவ, மாணவிகளும் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் புதுக்கோட்டை, சங்கரன்கோவிலில் உள்ள மனோ கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். கட்டணத்தை குறைக்க கோரி இன்றும் 3வது நாளாக போராட்டம் தொடரும் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.