மணியாகிவிட்டது, இத்தோட நான் முடிச்சிக்கிறேன்.. மரணம் பற்றி முன்பே உணர்த்திய மனோரமா!
சென்னை: தமிழ் திரையுலகின் சகலகலாவள்ளி மனோரமா, மரணத்திற்கு முன்பு கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சியில், மரணம் குறித்து மறைமுகமாக சில குறிப்புகளை வெளிப்படுத்தியுள்ளார்.
சாதனை நடிகையான மனோரமா, கடந்த சனிக்கிழமை இரவு உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். மூச்சுத்திணறல் பிரச்சினையால் அவ்வப்போது பாதிக்கப்பட்டு வந்த மனோரமா, இரு வாரங்கள் முன்பு ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
வசனம் பேசினார்
மூத்த பத்திரிகையாளருக்கான, உதவி வழங்கும் நிகழ்ச்சியான அதுதான், மனோரமாவின் கடைசி நிகழ்ச்சியாகும். அந்த நிகழ்ச்சியில், புறநானூற்றில் வரும் ஒரு நிகழ்வு பற்றி, கருணாநிதி எழுதிய நீண்ட வசனத்தை அசத்தல் தமிழிலில் உணர்ச்சி பொங்க பேசினார் மனோரமா. சாவு என்பது சகஜமானது. தாயத்தில் காய்கள் வெட்டப்படுவதை போல, களத்தில் வீரர்கள் செத்து விழுவது சகஜம் என்று நீண்டது அந்த வசனம்.
நடுங்கிய கரங்கள்
இதைத்தொடர்ந்து பக்கா சென்னை தமிழில் நீண்ட டயலாக் ஒன்றையும் மனோரமா பேசினார். அப்போதே அவரது கைகள் நடுங்கின. மூச்சு இறைத்தது. ஆனாலும், முகத்தில் அப்படி ஒரு பூரிப்பு காணப்பட்டது.
சந்தோஷம்
"அத்தனை பத்திரிகை நண்பர்களையும் ஒரே நேரத்தில் பார்க்க முடியாது. இப்போது பார்த்ததால் இதை பேசுகிறேன்" என்று பேச்சை ஆரம்பித்த மனோரமா, பேச்சின் முடிவில், "எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இப்போ செத்துப்போனா கூட ரொம்ப சந்தோஷப்படுவேன். பத்திரிகையாளர்களிடம் கதையை சொல்ல ஆசைப்பட்டேன். மனசு ரொம்ப சந்தோஷமா இருக்கு. மணி ஆகிகிட்டு இருக்கு. அதனால இத்தோட நான் முடிச்சிக்கிறேன். நன்றி நன்றி" என்றார்.
கலைஞானி
ஆன்மீக ஞானிகளுக்கு, மரணம் பற்றி முன்கூட்டியே அறியும் சக்தி இருப்பதாக கூறுவார்கள். கலைஞானியான மனோரமாவுக்கும், அந்த ஆற்றல் இருந்திருக்கும்போல. எனவேதான். நிகழ்ச்சி முடிய நேரம் ஆகிவிட்டது, எனது உரையை முடிக்கிறேன் என்று கூறாமல், "மணி ஆகிகிட்டு இருக்கு. இத்தோட நான் முடிச்சிக்கிறேன்" என்று கூறியிருப்பார் போலும்.