99 முறை தன் மரணச் செய்தியை கேட்டு தானே சிரித்த தலைவன்... கருணாநிதி குறித்து மனுஷ்யபுத்திரன்
99 முறை தன் மரணச் செய்தியை கேட்டு தானே சிரித்த தலைவன் என்று கருணாநிதி குறித்து மனுஷ்யபுத்திரன் கவிதை எழுதியுள்ளார்.
Recommended Video
சென்னை: 99 முறை தன் மரணச் செய்தியை கேட்டு தானே சிரித்த தலைவன் என்றும் 100 வது முறையாகவும் கேட்டு புன்னகையுடன் காலைத் தேநீர் அருந்துகிறார் என்றும் கருணாநிதி குறித்து மனுஷ்யபுத்திரன் கவிதை எழுதியுள்ளார்.
கருணாநிதி காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குறித்து எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் அற்புதம் நிகழ்ந்த இரவு என்ற தலைப்பில் கவிதை எழுதியுள்ளார்.
கவிதை பின்வருமாறு:
அற்புதம் நிகழ்ந்த இரவு
.......
மனுஷ்ய புத்திரன்
......
எப்போதும் அற்புதங்களை நிகழ்த்திய தலைவன்
நேற்றிரவும் ஒரு அற்புதத்தை நிகழ்த்தினார்
99 முறை தன் மரணச் செய்தியை
தானே கேட்டுச் சிரித்த தலைவன்
100 வது முறையாகவும் கேட்டு
புன்னகையுடன் காலைத் தேநீர் அருந்துகிறார்
கட்டுமரமாய் இருப்பேன் என்று சொன்ன தலைவனை
நேற்றிரவு ஆழிப்பேரலை ஒன்று சூழ்ந்தது
எங்கோ முழ்கி
ஒரு நீச்சல் சாகசக்காரனாய்
மிதந்து மேலே வருகிறார்
போராடுகிற மனிதனுக்கு
அதுவே ஒரு போதையாகிவிடுகிறது
அற்புதங்களை நிகழ்த்துகிற மனிதனுக்கு
அதுவே ஒரு பழக்கமாகிவிடுகிறது
அற்புதம் நிகழ்ந்த இரவில்
வதந்திகள் வெட்டுக்கிளிகளைபோல
நகரமெங்கும் பரவியிருந்தன
கடைகள் அவசரமாக அடைக்கப்பட்டன
மிஞ்சியிருந்த பால் பாக்கெட்டுகளை பதட்டத்துடன் வாங்கியடி
அவசரமாக வீடு நோக்கி நடந்தார்கள்
எல்லோரும் எல்லாவற்றையும் நம்பினார்கள்
எல்லோரும் எல்லாவற்றையும் சந்தேகித்தார்கள்
எல்லோரும் மற்றவர்களை தூங்கச் சொல்லிவிட்டு
எல்லோரும் விழித்திருந்தார்கள்
நகரமெங்கும் துயரம்
கம்பளம் விரித்து அமர்ந்திருந்தது
மக்கள் குரலை
எப்போதும் கேட்ட தலைவனுக்கு
இப்போதும் கேட்டது
மக்களின் குரல்
"எழுந்து வா தலைவா "
ஒரு நூற்றாண்டு களைப்பில்
சற்றே கண்ணயரச் சென்ற தலைவனின்
இதயத்தின் ஆழத்தில் கேட்டது அந்தக் குரல்
" எழுந்து வா தலைவா"
அந்தக்குரல்
மருத்துவமனையின்
மூடப்பட்ட கதவுகளை
அறுத்துச் சென்றது
பேரிருள் சூழந்த ஒரு இரவின்
கனத்த இருளை ஊடுருவிச் சென்றது
" எழுந்து வா தலைவா"
மக்கள் கொட்டும் மழையில்
கலைய மறுத்து நின்றுகொண்டிருக்கிறார்கள்
ஆயிரம் ஆயிரம் கண்ணீர் துளிகள் மேல் ஆயிரமாயிரம் மழைத்துளிகள்
விழுந்தவண்ணம் இருக்கின்றன
யாரோ ஒருத்தி மருத்துமனை வாயிற்கதவை
பிடித்து உலுக்குகிறாள்
" என் தகப்பனை வரச் சொல்
என் தலைவனை வரச் சொல்"
தலைவனின் காதில்
யாரோ சொல்கிறார்கள்
" நிலமை கட்டுக்கடங்காமல்
சென்று கொண்டிருக்கிறது
உங்களைத் தவிர வேறு யாரும்
அவர்களைக் கட்டுப்படுத்த முடியாது"
ஒரு நூற்றாண்டு காலம்
இலட்சோப இலட்சம் முடிவுகளை
எடுத்த தலைவன்
கண் விழித்து கண் துஞ்சும் வரை
முடிவுகள் எடுப்பதையே வாழ்வாக் கொண்ட தலைவன்
கரகரத்த குரலில் முணுமுணுக்கிறான்
" நான்தான் எல்லாவற்றையும் முடிவு செய்திருக்கிறேன்
அப்படித்தானே இதுவரை எல்லாமும் நடந்திருக்கிறது
அவர்களிடம் போய்ச் சொல்
நான் இன்னும் முடிவெடுக்கவில்லை
இன்றைய பொதுகூட்டம் முடிந்தது
பத்திரமாக வீட்டிற்குப் போகச் சொல்"
பிறகு நாங்கள்
வீடு திரும்பினோம்
என்று மனுஷ்யபுத்திரன் கவிதை எழுதியுள்ளார்.