ஆர்கே நகரில் நடக்கும் அலப்பறைகள்... எங்கப்பா ஆண்டவரு ஒரு வார்த்தை கூட டுவிட் போடலயே?
Recommended Video
சென்னை: டுவிட்டர் மூலம் அரசியல் புரட்சியை ஏற்படுத்தலாம் என்பதை தமிழகத்திற்கு நடிகர் கமல்ஹாசன் கற்றுக்கொடுத்துள்ளார். அவரது டுவிட் ஒன்றொன்றும் அரசியல் தளத்தில் பரபரப்பை ஏற்படுத்திவந்தன. ஆனால், ஆர்.கே நகர் இடைத்தேர்தல் பிரச்சாரம் முடிந்து நாளை வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. இதுவரையில் இந்த தேர்தல் குறித்தோ, பணப்பட்டுவாடா புகார்கள் குறித்தோ எந்த கருத்தையும் கமல்ஹாசன் தெரிவிக்கவில்லை.
இதுதான் கமல் போட்ட கடைசி காரசாரமான அரசியல் விமர்சன டுவிட். https://twitter.com/ikamalhaasan/status/934818923077287947 கோவையில் ரகு என்பவர் விளம்பர பேனரில் மோதி உயிரிழந்த சம்பவம் குறித்து காட்டமாக விமர்சித்த கமல், இந்த அரசு வெகுநாள் நீடிக்காது என்று சொல்லியிருந்தார். அதற்குப்பிறகு அமெரிக்காவில் நடக்கும் விஸ்வரூபம் 2 படப்பிடிப்பில் தீவிரமாகிவிட்டார் கமல்ஹாசன்.
நடிகர் சங்க தேர்தலில் விஷாலுக்கு வெளிப்படையான ஆதரவை கமல் தெரிவித்திருந்தார். அதேபோல், விஷால் வெற்றி பெற்ற பிறகு நடிகர் சங்க சொத்துக்குழு தலைவராக கமல் நியமிக்கப்பட்டார். அதேபோல ஆர்.கே நகர் இடைத்தேர்தலிலும் ஆதரவு கிடைக்கும் என கருதினார் விஷால்.
கருத்து சொல்லாத கமல்
ஆர்.கே நகர் இடைத்தேர்தல் திடீரென குதித்த நடிகர் விஷாலும், தான் சந்தித்த சவால்களை கமலிடம் பகிர விரும்பினார். ஆனால், கடைசிவரை அது நடக்கவே இல்லை. டுவிட்டரில் கூட இதுவரை கமல் எந்தப்பதிவும் இடவில்லை.
எங்கே போனார் டுவிட்டர் அரசியல்வாதி?
கமலின் டுவிட்டர் அமைதியை சில அரசியல்தலைவர்கள் கிண்டல் அடித்துள்ளனர். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், எங்கே போனார் டுவிட்டரில் அரசியல் நடத்தியவர்? அவருக்கு மக்கள் முக்கியமல்ல, அவரது படங்கள் தான் முக்கியம் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ள வேண்டும் என்று போட்டு உடைத்தார்.
விரைவில் அறிக்கை
இது குறித்து, கமலின் முகாமில் கேட்டபோது, அமெரிக்காவில் மும்முரமான படப்பிடிப்பில் இருந்தாலும், தமிழகத்தில் என்ன நடக்கிறது என்பதை கமல் கேட்டுத்தெரிந்து கொண்டுதான் உள்ளார். விரைவில் அறிக்கை வெளியிடவும் வாய்ப்புள்ளது. ஆர்.கே நகர் தேர்தலில் பணப்பட்டுவாடா நடந்தது குறித்து விரிவான தகவல்கள் ஆதாரங்களுடன் அவருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்கிறார்கள்.
எதுகை மோனை வசனங்கள் மிஸ்ஸிங்
ஒருவேளை படப்பிடிப்பு இல்லாமல், சென்னையில் கமல் இருந்திருந்தால், ஆர்.கே நகர் தேர்தல் களம் வேறுமாதிரி இருந்திருக்கலாம் என்கிறார்கள் ஊழல் ஒழிப்பு ஆர்வலர்கள். ஆனால், ஆண்டவர் இங்கு இல்லாததால் டுவிட்டரில் எதுகை, மோனை வசனங்களும் தமிழ் வார்த்தைகளும் இல்லாமல் சுவாரஸ்யம் மிஸ்ஸிங்.