வடியாத வெள்ளம்.. ஹெலிகாப்டரையும், படகுகளையும் இன்னும் நம்பியிருக்கும் பரிதாப மக்கள்
சென்னை: சென்னையின் பல பகுதிகளில் இன்னும் கூட வெள்ளம் வடியாமல் அப்படியே தேங்கிக் கிடக்கிறது. இதனால் வீடுகளை விட்டு வெளியே வந்து இயல்பு வாழ்க்கை வாழ முடியாமல் பலரும் தவித்து வருகின்றனர். படகுகளையும், ஹெலிகாப்டரில் போடப்படும் உணவு உள்ளிட்டவற்றையும் நம்பி, எதிர்பார்த்துக் காத்திருக்கும் அவலமும் தொடர்கிறது.
சென்னையைப் புரட்டிப் போட்ட மழை வெள்ளத்திலிருந்து நகரின் பெரும்பாலான பகுதிகள் மீண்டு வந்துள்ள நிலையில் பல பகுதிகள் இன்னும் தண்ணீரில்தான் மிதந்து கொண்டிருக்கிறது.
பல பகுதிகளில் இன்னும் வெள்ள நீர் வடியவில்லை. வீட்டுக்குள்ளும், தெருவிலும், சாலையிலும் நீர் வடியாமல் அப்படியே தேங்கிக் கிடக்கிறது. கூடவே கழிவு நீரும் சேர்ந்து சாக்கடைக் குளமாக மாறிக் காணப்படுகிறது.
காலை வைக்க முடியவில்லை
இந்த சாக்கடை நீரில் காலை வைக்க முடியாத அளவுக்கு மக்கள் பெரும் கஷ்டத்தையும், சிரமத்தையும் அனுபவித்து வருகின்றனர். பெரும் துர்நாற்றம் வேறு வீசுவதால் மக்களால் நிம்மதியாக இருக்க முடியவில்லை.
கொசுத் தொல்லை
கூடவே சாக்கடை நீரில் கொசுக்களும் அதிக அளவில் பெருகி விட்டதால் கொசுத் தொல்லை தாங்க முடியவில்லை. பகலிலேயே பெரிய பெரிய கொசுக்கள் கடிப்பதாகவும், இரவில் தூங்க முடியாத அளவுக்கு கொசுத் தொல்லை பெருகி விட்டதாகவும் மக்கள் குமுறுகிறார்கள்.
ஒக்கியம் துரைப்பாக்கம்
ஒக்கியம் துரைப்பாக்கம் பகுதி இன்னும் நீரில் மூழ்கிக் கிடக்கிறது. பக்கிங்காம் கால்வாய் வழியாக ஊருக்குள் புகுந்த நீர் இன்னும் வடியவில்லை. அப்படியே கடல் போல இந்தப் பகுதியை சூழ்ந்துள்ளது. இந்தப் பகுதியே பார்ப்பதற்கு தீவு போலக் காணப்படுகிறது.
ஹெலிகாப்டரில் உணவு
இப்பகுதியில் தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் உணவு உள்ளிட்டவை போடப்பட்டு வருகின்றன. அதேபோல படகுகள் மூலமாகவே இப்பகுதி மக்கள் போக்குவரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
பால் தண்ணீர் பிரச்சினை
பால், குடிநீர் கேன் உள்ளிட்டவற்றை வாங்க நெடுந்தூரம் போக வேண்டியிருப்பதாகவும், பெரும் சிரமமாக இருப்பதாகவும் இவர்கள் குமுறல் வெளியிடுகிறார்கள்.
பள்ளிக்கரணை
பள்ளிக்கரணை, நாராயணபுரம் பகுதிகளும் இன்னும் நீரில்தான் தத்தளிக்கின்றன. இங்கும் ஏரி நீரும், வெள்ள நீரும் புகுந்து கொண்டு இன்னும் வெளியேறாமல் உள்ளன. இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
வேளச்சேரி
வேளச்சேரியும் இன்னும் வெள்ளத்திலிருந்து வெளியே வரவில்லை. டான்சி நகரின் பல தெருக்கள் இன்னும் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது. மேலும் பல பகுதிகளிலும் வெள்ளம் இன்னும் வடியவில்லை.
மணப்பாக்கம்
லேசான மழை பெய்தாலே, சாதா நாட்களிலேயே குளம் குட்டை போல காணப்படும் மணப்பாக்கம் பகுதியில் தற்போது பெரும் கடல் போல காட்சி தருகின்றன பல பகுதிகள். இன்னும் வெள்ள நீர் இங்கு வடியாமல் இருப்பதால் மக்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர்.
பெருங்குடி - தரமணி
வேளச்சேரிக்கு அருகில் உள்ள பெருங்குடி, தரமணி தெருக்களம் வெள்ளத்தில் மூழ்கியே கிடக்கின்றன. மக்கள்அந்த சாக்கடை நீரில்தான் நடந்து போய்க் கொண்டுள்ளனர்.
ஹெலிகாப்டர் சேவை
இப்படி கடல் போல காட்சி தரும் பகுதிகளில் கடலோரக் காவல்படையினர் தொடர்ந்து அயராமல் செயல்பட்டு உதவிப் பொருட்களை வழங்கி வருகின்றனர்.
விடாமல் பறந்த கடலோரக் காவல்படை ஹெலிகாப்டர்
நேற்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கடலோரக் காவல் படையின் ஒரு ஹெலிகாப்டர் இடைவிடாமல் உதவிப் பொருட்களை மக்களுக்கு வழங்கியது. நேற்று மட்டும் 6 டன் உதவிப் பொருட்களை அது விநியோகித்தது.
வெள்ளம் பாதித்த பகுதிகளில்
மணலி, திருவொற்றியூர், வேளச்சேரி, பள்ளிக்கரணை, ஒக்கியம் துரைப்பாக்கம், புழல், பாடி உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஹெலிகாப்டர் மூலம் உதவிப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன.