திருப்பூரில் தங்கியிருந்த மாவோயிஸ்ட் தம்பதி- 80 செல்போன், 200 சிம்கார்டுகள் சிக்கியது
திருப்பூர்: கோவையில் கைது செய்யப்பட்ட மாவோயிஸ்ட் தம்பதி, திருப்பூரில் இரண்டரை ஆண்டுகள் வாடகை வீட்டில் தங்கி இருந்தது, விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த வீட்டுக்கு, நேற்று தம்பதியை அழைத்து வந்து விசாரித்த போலீசார், அங்கிருந்த ஏராளமான மொபைல்போன்கள், சிம்கார்டுகள், பிரசார 'சிடி'க்களை பறிமுதல் செய்தனர்.
கடந்த 4ஆம் தேதி மாலை கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அன்னூர் சாலையில் உள்ள பேக்கரியில் மாவோயிஸ்ட் தலைவன் ரூபேஸ், அவனது மனைவி சைனா உட்பட 5 பேர் கும்பலை சென்னை கியூ பிரிவு போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர். 5 பேரையும் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் அவர்களை 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரணையை போலீசார் தொடங்கியுள்ளனர்.
திருப்பூர் வாடகை வீட்டில்
திருப்பூர் டி.எம்.எஸ் 2வது வீதியில் உள்ள ராதாகிருஷ்ணன் (43) என்பவருக்கு சொந்தமான வீட்டின் மேல் மாடியில் மாவோயிஸ்ட் தலைவன் ரூபேஸ், மனைவி சைனாவுடன் கடந்த இரண்டரை வருடமாக தங்கி இருந்துள்ளது தெரியவந்துள்ளது.
வீட்டு உரிமையாளர் தகவல்
வீட்டு உரிமையாளரிடம், ரூபேஷ், மருந்து விற்பனை பிரதிநிதி எனவும், தனது பெயர் எழில் எனவும் கூறியுள்ளார். அவரது மனைவி, தனியார் வங்கியில் பணியாற்றுவதாக கூறியுள்ளார். அவர்களை போலீசார் கைது செய்த செய்திகளை படித்ததும் அதிர்ச்சியடைந்த வீட்டு உரிமையாளர், மாவோயிஸ்ட்கள், தங்களது வீட்டில் தங்கியிருந்ததாக, போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
போலீஸ் சோதனை
இதையறிந்து புதன்கிழமையன்று மாலை திருப்பூர் வந்த சென்னை கியூ பிரிவு போலீசார் மாவோயிஸ்ட் தம்பதி தங்கி இருந்த வீட்டுக்கு சென்று உரிமையாளரிடம் விசாரணை நடத்தினர். பின்னர், நேற்று காலை 8 மணி அளவில் ரூபேஸ் மற்றும் சைனாவை அந்த வீட்டுக்கு கியூ பிரிவு போலீசார் அழைத்து வந்தனர். வீட்டில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. காலை 8 மணிக்கு தொடங்கிய சோதனை மதியம் 4 மணி வரை நீடித்தது.
80 செல்போன்கள்
இதையொட்டி, 50க்கும் மேற்பட்ட போலீசார், அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வீடு அமைந்துள்ள ரோட்டில் 'பேரிகார்டு' வைத்து, போக்குவரத்து தடை செய்யப்பட்டது. தெற்கு தாசில்தார் கண்ணன் முன்னிலையில், வீட்டில் இருந்த ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வீட்டில், 80 மொபைல் போன்கள், 200 சிம் கார்டுகள், 400க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட் இயக்க பிரசார 'சிடி'க்கள் நோட்டீஸ்கள் இருந்தன.
வாக்காளர் அட்டைகள்
ஆந்திராவில், 20 தமிழர்கள் கொல்லப்பட்ட செய்திகள், நாளிதழ்களில் வந்த 'கட்டிங்' இருந்துள்ளன. பல்வேறு பெயர்களில் வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு ஜெராக்ஸ், நூற்றுக்கணக்கில் சிக்கியுள்ளன. மூன்று மாநிலங்களை தாக்க சதி திட்டம் தீட்டிய ஆவணங்கள், இயக்க கொடிகள், கம்ப்யூட்டரில் பதிவாகியிருந்த தகவல்கள் என, பறிமுதல் செய்த ஆவணங்களை மூன்று அட்டை பெட்டிகளில் போலீசார் கொண்டு சென்றனர். ஆனால் ஆயுதங்கள் எதுவும் சிக்கவில்லை.
யாரிடமும் பேசுவதில்லை
இதனையடுத்து அருகில் இருந்த வீடுகள் மற்றும் அப்பகுதியில் உள்ள மளிகை கடை, டீ கடைக்காரர்கள் உள்ளிட்ட சிலரிடமும் ரூபேஸ், சைனா நடவடிக்கை குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த இரண்டரை வருடங்களாக வீட்டின் மேல் மாடியில் வாடகைக்கு தங்கி இருந்தனர். என்னிடம் மெடிக்கல் ரெப்பாக வேலை பார்த்து வருவதாக ரூபேஸ் தெரிவித்தார். அவரது மனைவி அதிகம் பேச மாட்டார். மாதத்தில் 2 வாரம் அல்லது 3 வாரம் தங்குவார்கள். உறவினர்கள் யாரும் வருவதில்லை என்று என்று வீட்டின் உரிமையாளர் ராதாகிருஷ்ணன், போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
வீட்டுக்கு சீல் வைப்பு
விசாரணை முடிந்து, மாலை, 5:30 மணிக்கு, போலீஸ் பாதுகாப்புடன் இருவரையும், வீட்டுக்கு வெளியே அழைத்து வந்தனர். நூற்றுக்கணக்கான மக்கள், பத்திரிகையாளர்கள் கூடியிருந்தனர். மாவோயிஸ்ட் தம்பதி, கை உயர்த்தி, கோஷமிட்டபடியே, போலீஸ் வேனில் ஏறினர். அவர்கள் தங்கியிருந்த வீட்டுக்கு 'சீல்' வைக்கப்பட்டது.