தமிழக கேரள எல்லைப் பகுதியில் மாவோஸ்யிஸ்டுகளின் சுவரொட்டியால் பரபரப்பு.. நீலகிரியில் போலீசார் ரோந்து
தமிழக கேரள எல்லைப் பகுதியில் மாவோஸ்யிஸ்டுகள் ஓட்டிய சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நீலகிரிப் பகுதியில் சந்தேகத்திற்குரிய நபர்களைத் தேடும் பணியில் போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
பந்தலூர்: அரசை எதிர்த்தும், ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் நமது போராட்டம் தொடரும்' என்ற மலையாளத்தில் எழுதப்பட்ட சுவரொட்டியால் தமிழக கேரள எல்லைப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழக எல்லை பகுதியான நாடுகாணியிலிருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ளது கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் புஞ்சைகொல்லி ஆதிவாசி காலனி.
இந்தப் பகுதிக்கு வந்த 6 பேர் கொண்ட குழு ஒன்று அரசை எதிர்த்தும், ஏகாதிபத்தியத்தை எதிர்த்தும் நமது போராட்டம் தொடரும்' என்று மலையாள மொழியில் கைகளால் எழுதப்பட்ட சுவரொட்டிகளை ஒட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தச் சுவரொட்டியை ஒட்டியவர்களில் ஒருவர் மாவோயிஸ்டு தலைவர் சோமன் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த கேரள வனத்துறை மற்றும் போலீசார் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், நீலகிரி நக்சல் ஒழிப்பு சிறப்பு காவல் படையினரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.