தோழர்களை தனிமை சிறையில் அடைப்பதா.. பெண் மாவோயிஸ்ட் வேலூர் சிறையில் உண்ணாவிரதப் போராட்டம்
சக தோழர்கள் திருச்சியில் தனிமை சிறையில் அடைக்கப்பட்டதை கண்டித்து வேலூர் சிறையில் உள்ள பெண் மாவோயிஸ்ட் ரீனா ஜோசப் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டள்ளார்.
வேலூர்: வேலூர் சிறையில் பெண் மாவோயிஸ்ட் ரீனா ஜோசப் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஆயுத பயிற்சி அளித்ததாக 32 வயதான மாவோயிஸ்ட் நீலமேகம் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவரது தாய் மஞ்சுளா, ஐகோர்ட் மதுரை கிளையில்
தாக்கல் செய்த மனுவில், திருச்சி மத்திய சிறையிலுள்ள என் மகனை போலீசார் அடித்து துன்புறுத்துகின்றனர் என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பி.வேல்முருகன் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாவட்ட நீதிபதியின் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், நீலமேகம் தாக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில், அவரையும் சந்திரகலா என்ற மற்றொரு மாவோயிஸ்டையும் திருச்சி மத்திய சிறையில் உள்ள தனிமை சிறையில் போலீசார் அடைத்துள்ளனர். அதனை எதிர்த்து வேலூர் சிறையில் உள்ள மாவோயிஸ்ட் ரீனா ஜோசப் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் வேலூர் சிறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.