கேரளாவில் கைதான பெண் மாவோயிஸ்ட் சைனாவின் ஜாமீன் மனு- கோவை நீதிமன்றம் தள்ளுபடி
கோவை: கேரளாவில் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட பெண் மாவோயிஸ்டு சைனாவை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை கோவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
கேரளாவின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பதுங்கி இருந்து பல்வேறு தாக்குதல்களை நடத்தியது தொடர்பாக மாவோயிஸ்டு இயக்க தலைவன் ரூபேஷ், அவருடைய மனைவி சைனா, கூட்டாளிகளான அனூப், வீரமணி, கண்ணன் ஆகிய 5 பேர் கடந்த மாதம் 4 ஆம் தேதி கருமத்தம்பட்டியில் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் ரூபேஷ், சைனா ஆகியோர் கேரள சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதேபோல் வீரமணியை கேரள மாநிலம் பாலக்காடு போலீசார் விசாரணைக்கு அழைத்துசென்று மீண்டும் கோவை சிறையில் அடைத்தனர். மாவோயிஸ்டு அனூப் எர்ணாகுளத்தில் வெடிமருந்து பதுக்கல் வழக்கில் விசாரணை நடத்துவதற்காக எர்ணாகுளத்துக்கும், கண்ணன் கொடைக்கானலில் பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக விசாரணைக்கு கொடைக்கானலுக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மாவோயிஸ்டுகள் வீரமணி, கண்ணன், அனூப் ஆகிய 3 பேர் தங்களை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனு ஏற்கனவே கோவை கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்தநிலையில் பெண் மாவோயிஸ்டு சைனா சார்பில் வழக்கறிஞர்கள் பாலமுருகன் உள்பட 5 வழக்கறிஞர்கள் அவரை ஜாமீனில் விடுதலை செய்யக்கோரி கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவில், "வக்கீலுக்கு படித்து முடித்த சைனா, கேரள கோர்ட்டில் ஊழியராக பணியாற்றியதாகவும், ரூபேசின் மனைவி என்பதை தவிர வேறு எந்தவிதமான சட்டவிரோத காரியங்களிலும் அவர் ஈடுபடவில்லை என்றும், 2 பெண் குழந்தைகள் உள்ளதால் அவர்களை பராமரிக்க வேண்டிய பொறுப்பு இருப்பதால் சைனாவை ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும்" என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது.
மாவோயிஸ்டு சைனாவின் ஜாமீன் மனு நேற்று கோவை மாவட்ட முதன்மை நீதிபதி பொங்கியப்பன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, "மாவோயிஸ்டு இயக்கத்தினரிடம் கைப்பற்றப்பட்ட மடிக்கணினி, மற்றும் சி.டி.க்களில் பதிவாகியுள்ள தகவல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த விசாரணை முடிவுகள் வெளிவர சில நாட்கள் ஆகலாம். திருப்பூரில் ரூபேசும், சைனாவும் போலி பெயர்களில் தங்கி இருந்துள்ளனர். ரூபேஷ் மீது கேரளாவில் 23 வழக்குகள் உள்ளன. இந்தநிலையில் சைனாவை ஜாமீனில் விடுதலை செய்தால் தலைமறைவாகலாம், அல்லது விசாரணை பாதிக்கப்படலாம் என்பதால் சைனாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்கிறேன்" என்று நீதிபதி பொங்கியப்பன் உத்தரவில் கூறியுள்ளார்.