ஸ்ரீவில்லிப்புத்தூர் மலைப் பகுதியில் மாவோயிஸ்டுகள் முகாம்?
ஸ்ரீவில்லிப்புத்தூர்: கேரளாவைத் தொடர்ந்து தமிழகத்தின் மலைப்பகுதியிலும் மாவோயிஸ்டுகள் முகாம் அமைத்து தங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
கேரளாவின் வயநாடு , பாலக்காடு உள்ளிட்ட இடங்களில் மாவோயிஸ்டுகள் அதிரடியாக தாக்குதல் நடத்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தனர். இதனைத் தொடர்ந்து மாவோயிஸ்டுகளுக்கு உதவியதாக இருவரை கைது செய்து அம்மாநில போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் ஸ்ரீவில்லிப்புத்தூர் மலைப் பகுதியில் மாவோயிஸ்டுகள் ஊடுருவியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்பகுதியில் முகாமிட்டுள்ள மாவோயிஸ்டுகள், அத்திக்கோவில் வனப்பகுதியில் பொதுமக்களை நேரில் சந்தித்து பிளவக்கல் அணை பகுதியில் நடைபெற உள்ள தங்களது இயக்க கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைத்துள்ளனர்.
இது குறித்து பொதுமக்களில் சில கூமாபட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து ஸ்ரீவில்லிப்புத்தூர் மலைப் பகுதியில் போலீசார் தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.