தென்னிந்தியாவில் காலூன்றும் மாவோயிஸ்டுகள்! தமிழக, கர்நாடக, கேரள எல்லையில் முகாம்!!
நீலகிரி மாவட்டத்தில் கேரள, கர்நாடக மாநிலங்களின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது கூடலூர், பந்தலூர் பகுதிகள். இதில் மத்திய உளவுத் துறை விடுத்துள்ள எச்சரிக்கையின்படி நீலகிரி மாவட்டத்தையொட்டியுள்ள கேரள மாநிலத்தில் வயநாடு, மலப்புரம், கண்ணூர் மாவட்டங்களிலும், கர்நாடக மாநிலத்தில் குடகு, ஷிமோகா, குதிரேமுக் உள்ளிட்ட பகுதிகளிலும் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கேரள, கர்நாடக மாநிலங்களையொட்டியுள்ள தமிழக எல்லைப் பகுதிகளிலும் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் உள்ளதாக அவ்வப்போது கிடைக்கும் தகவல்களையடுத்து காவல் துறையினரும், அதிரடிப்படையினரும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் இது வழக்கமான தேடுதல் வேட்டையைப் போலவே உள்ளதெனவும், முக்கியமான பகுதிகளில் இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதில்லை எனவும் எல்லையோரப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக தமிழக-கேரள மாநில எல்லையிலுள்ள கேரளத்தின் முண்டேரி, கருவாடுகுன்னு உள்ளிட்ட பகுதிகளில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் உள்ளதாக கேரள மாநில நிர்வாகமே அறிவித்துள்ளது. இந்நிலையில், அங்கிருந்து தமிழகம் அல்லது கர்நாடகத்திற்கு செல்லக்கூடிய வழிகள் அதிகளவில் உள்ளதாக குறிப்பிட்டிருந்த போதும் கூட இப்பகுதிகளில் தமிழக காவல் துறையினர் எத்தகைய பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை. எனவே, கூடலூர் அருகேயுள்ள பிதர்க்காடு, கிளன்ராக், சுல்தான்பத்தேரி, நாடுகாணி உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால் நீலகிரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, தமிழகத்தின் எல்லையோரமுள்ள கேரளம், கர்நாடக மாநிலப் பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும் என்கின்றனர் இப்பகுதி மக்கள்.