கூலி வேலை பார்க்கும் மறைமலை அடிகளாரின் பேரன்..!
சென்னை: தமிழறிஞர் மறைமலை அடிகளாரின் வாரிசு கட்டட வேலை செய்து வருவதாகவும், அரசுப் பணி வழங்க வேண்டும் எனவும் முதல்வரின் தனிப் பிரிவில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தலைமைச் செயலகத்தில் முதல்வரின் தனிப்பிரிவில் மறைந்த தமிழறிஞர் மறைமலை அடிகளாரின் மகன் மறை பச்சையப்பன் அளித்துள்ள மனுவில் அவர் தெரிவித்துள்ளார்.
"சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் காலனியில் வசிக்கிறேன். மறைமலை அடிகளின் மூன்றாவது மனைவி கண்ணம்மாளுக்குப் பிறந்தவர். தந்தையின் மறைவுக்குப் பிறகு குடும்பம் நிர்க்கதியாகிவிட்டது.
பல ஆண்டுகளாக பசியிலும் பட்டினியிலும் குடும்பம் வாடுகிறது. எனது மனைவி காந்திமதி. வயதான எங்களால் வேலை எதுவும் செய்ய முடியவில்லை. கட்டட வேலைக்கு சென்றதில் கால் முறிந்துவிட்டது.
எங்களது 28 வயதான மகன் சிவகுமார் கூலி வேலைக்குச் செல்கிறார். அவரது சொற்ப சம்பளத்தில் வாழ்கிறோம். மறைமலை அடிகளாரின் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டதில் கிடைத்த ரூபாய் 30 லட்சத்தை 11 வாரிசுதாரர்களுக்கு பிரித்ததில் எனக்கு ரூபாய் 2.70 லட்சம் கிடைத்தது.
அதை வைத்து மகள் திருமணத்தை முடித்தேன். தற்போது கஷ்டத்தில் இருக்கிறேன். எனது மகனுக்கு அரசுப் பணிவேண்டி பல ஆண்டுகளாக முயற்சிக்கிறேன். எனது மகனுக்கு அரசுப் பணி வழங்க வேண்டும்" என்று மனுவில் அவர் கூறியுள்ளார்.