பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு... குற்றப்பத்திரிகை நகலை கோர்ட்டில் பெற்ற மாறன் சகோதரர்கள்
பிஎஸ்என்எல் இணைப்புகளை சன் குழுமத்துக்கு ஆதரவாகப் பயன்படுத்தி கோடிக்கணக்கில் முறைகேடு செய்தது தொடர்பான வழக்கில், சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் மாறன் பிரதர்ஸ் ஆஜராகி குற்றப் பத்திரிகை நகலைப் பெற்றுக்கொண்
சென்னை: சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் தயாநிதி கலாநிதி ஆகியோர் நேரில் ஆஜராகி, பிஎஸ்என்எல் முறைகேடு வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை நகலை பெற்றனர்.
இவர்களோடு இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7 பேருக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் 28ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தும் இன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2004-2007ஆம் ஆண்டுகளில் மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்தபோது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியுள்ளார். சென்னை கோபாலபுரம், போட் கிளப் சாலையில் உள்ள அவரின் வீடுகளுக்கு சட்ட விரோதமாக அதிவேக உயர் இணைப்புகள் கொண்ட தொலைபேசி இணைப்புகளை அமைத்துக்கொண்டார்.
மேலும் இந்த இணைப்புகளை சன் டிவிக்கு பயன்படுத்திய வகையில், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.1.78 கோடி அளவுக்கு அரசுக்கு இழப்பும் உண்டாகியுள்ளது என்று வலுவான குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.
இந்த வழக்கில், சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்தாண்டு டெல்லி சிபிஐ போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த நிலையில், சென்னை சிபிஐ 14ம் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், கடந்த ஏப்ரல் 3ம் தேதி கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்ளிட்ட அனைவரும் குற்றப்பத்திரிகை நகலை பெற நேரில் ஆஜராகினர்.
அப்போது, குற்றப்பத்திரிகை நகல் தயாராகவில்லை, அதனையடுத்து விசாரணை மே 22ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அன்று தயாநிதி மாறன் மற்றும் கலாநிதி மாறன் ஆஜராகவில்லை. மற்றவர்கள் ஆஜராகி இருந்தனர். இதனால் அடுத்த விசாரணையை இன்று ஒத்திவைத்து, நீதிபதி எஸ். நடராஜன் உத்தரவு அளித்திருந்தார்.
இந்த உத்தரவின்படி இன்று ஆஜரான கலாநிதி மாறன், தயாநிதி மாறன் உள்பட 7பேருக்கு குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கபட்டது. இந்த வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 28ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.