சட்டவிரோத பிஎஸ்என்எல் எக்சேஞ்ச் வழக்கு: மாறன் சகோதரர்கள் விடுதலை
சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் இருந்து மாறன் சகோதரர்களை விடுவித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.
சென்னை: பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்பு வழக்கில் இருந்து தயாநிதி விடுவிக்கப்பட்டுள்ளார். தயாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேரை விடுவித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. முகாந்திரம் இல்லாததால் 7 பேரையும் விடுவிப்பதாக சிபிஐ நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்தபோது, கடந்த 2004-07 காலகட்டத்தில் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கோபாலபுரம் மற்றும் போட் கிளப் சாலையில் உள்ள வீடுகளில் சட்டவிரோத அதிவேக உயர் இணைப்புகள் கொண்ட டெலிபோன் எக்சேஞ்ச் நடத்தியதாகவும், இந்த இணைப்புகளை சன் டிவிக்கு பயன்படுத்திய வகையில் அரசுக்கு ரூ.1.78 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படுத்திய தாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்தச் சட்டவிரோத தொலைபேசி இணைப்புகள் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக பத்திரிக்கையாளர் குருமூர்த்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தொலைபேசி இணைப்பு முறைகேடு புகார் குறித்து விசாரணை செய்ய சிபிஐ க்கு உத்தரவிட்டது. அதன்படி, 2011 ஆம் ஆண்டு இது தொடர்பான விசாரணை தொடங்கி 23 ஜூலை 2013 ஆம் ஆண்டு வழக்கு சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
சிபிஐ நடவடிக்கை
தயாநிதி மாறன், கலாநிதி மாறன், சென்னை பிஎஸ்என்எல் பொது மேலாளராக பதவி வகித்த கே.பிரம்மநாதன், அந்நிறுவனத்தின் முன்னாள் துணைப் பொதுமேலாளர் எம்.பி.வேலுசாமி, தயாநிதி மாறனின் தனிச்செயலாளராக இருந்த கவுதமன், சன் டிவி ஊழியர்கள் உள்ளிட்டோர் மீது டெல்லி சிபிஐ போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய சன் டிவி முதன்மை தொழில்நுட்ப அதிகாரி கண்ணன், எலக்ட்ரீசியன் ரவி, தயாநிதி மாறனின் தனிச்செயலாளர் கவுதமன் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரியில் சென்னையில் கைது செய்தனர்.
சிபிஐ குற்றப்பத்திரிக்கை
இந்த வழக்கில், சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிபிஐ போலீஸார் சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
அந்த குற்றபத்திரிக்கையில், தயாநிதி மாறன் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி,அதி உயர் தொலைபேசி இணைப்புகளை, தனது சகோதரர் நிறுவனமான சன் தொலைக்காட்சிக்கு முறைகேடாக வழங்கியுள்ளார்.
கூட்டுச்சதி மோசடி
மேலும் இந்த இணைப்புகளை தனது சகோதரர் கலாநிதி மாறன் நடத்தி வரும் சன் தொலைக்காட்சிக்கு கொடுத்ததன் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி உள்ளார். இதன் மூலம் அரசுக்கு 1.76 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என கூறப்பட்டிருந்தது. இந்த புகாரில் குற்றவாளிகள் அனைவரும் கூட்டு சதி உள்ளிட்ட சட்டப்பிரிவில் மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாறன் சகோதரர்கள் மனு
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை சென்னை சிபிஐ 14-வது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி பாஸ்கர் முன்பு நடந்தது. இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூலை மாதம், குற்றஞ்சாட்டப்பட்ட தயாநிதி மாறன், கலாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டது. இதன் பிறகு இந்த வழக்கில் இருந்து விடுவிக்க கோரி குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மனு தாக்கல் செய்யப்பட்டது.
விடுவிக்க எதிர்ப்பு
புதிய தொழில்நுட்பங்களை முழுமையாக புரிந்து கொள்ளாமல் 764 இணைப்புகள் என சிபிஐ வழக்கு தொடர்ந்திருப்பதாக மாறன்கள் தரப்பில் வாதிடப்பட்டது. பைலட் நம்பர்களில் இருந்து சைல்டு நம்பர்கள் எடுக்கப்பட்டதாகவும், சைல்டு நம்பர்களை தொலைபேசி இணைப்பாக கணக்கில் கொள்ள முடியாது என்றும் கூறப்பட்டது. குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் உள்ளதாகவும் யாரையும் விடுவிக்க கூடாது என்றும் சி.பி.ஐ. தரப்பில் கோரப்பட்டது.
சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
நீதிபதி உத்தரவின் பேரில் கடந்த 6ஆம் தேதியன்று எழுத்து பூர்வ வாதங்களும் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில் இந்த வழக்கில் 14ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி நடராஜன் கடந்த தெரிவித்தார். இன்று காலையில் மாறன் சகோதரர்கள் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தால் பிற்பகலில் தீர்ப்பளிக்கப்படும் என்று நீதிபதி நடராஜன் அறிவித்தார்.
விடுதலையான மாறன் பிரதர்ஸ்
பிற்பகலில் வழக்கு விசாரணைக்கு வந்த போது, நீதிபதி நடராஜன் தீர்ப்பை வாசித்தார். பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்பு வழக்கில் இருந்து தயாநிதி, அவரது சகோதரர் கலாநிதி மாறன் உள்ளிட்ட 7 பேரை விடுவித்து தீர்ப்பளித்தார். முகாந்திரம் இல்லாததால் 7 பேரையும் விடுவிப்பதாக சிபிஐ நீதிமன்ற நீதிபதி நடராஜன் அறிவித்தார். கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் இருந்து கலாநிதி மாறன், தயாநிதி மாறன் விடுவிக்கப்பட்டுள்ளனர்.